தினமணி 30.08.2010
பாதாள சாக்கடை பணி நடக்கும் இடங்களில் சாலைகளை சீரமைக்க வேண்டும்
கோவை, ஆக.29: பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடக்கும் இடங்களில் உடனடியாக சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று கிழக்கு மண்டல கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மண்டலத் தலைவர் எஸ்.எம்.சாமி தலைமை வகித்தார். துணை மேயர் நா.கார்த்திக் முன்னிலை வகித்தார்.
இக் கூட்டத்தில் பேசிய கவுன்சிலர்கள், பாதாள சாக்கடை நடக்கும் இடங்களில் உள்ள சாலைகளில் குழிகள் தோண்டப்படுகின்றன. பின்னர் அவை சரியாக மூடப்படாததால் அவை குண்டும், குழியுமாக உள்ளன. எனவே, அச் சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்றனர். மேலும் குடிநீர் பிரச்னைகளை சீரமைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
ஒவ்வொரு வார்டுகளிலும் வளர்ச்சிப் பணிகளுக்காக தலா ரூ.5 லட்சம் வீதம் மொத்தம் ரூ.1.25 கோடி ஒதுக்கவும், ரூ.90 லட்சம் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளுக்கு தொழில்நுட்ப அனுமதி வழங்கவும் இக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
எதிர்கட்சித் தலைவர் வெ.ந.உதயக்குமார், பணிக்குழுத் தலைவர் ராமசாமி, கவுன்சிலர்கள் சோபனா செல்வன், கோமதி ராஜன், கிழக்கு மண்டல உதவி ஆணையர் லோகநாதன், உதவிச் செயற்பொறியாளர் ஜெயராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.