Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

சிறப்பு சாலைத் திட்டத்துக்கு சாலைகளைத் தேர்வு செய்யும் பணி

Print PDF

தினமணி 26.08.2010

சிறப்பு சாலைத் திட்டத்துக்கு சாலைகளைத் தேர்வு செய்யும் பணி

திருச்சி, ஆக. 25: திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் சிறப்பு சாலைத் திட்டம் 2010-11-ன் கீழ் மேம்படுத்தப்படவுள்ள சாலைகள் தேர்வு செய்யும் பணியை மாநகராட்சி ஆணையர் த.தி. பால்சாமி புதன்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட பகுதியில் மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களின் கீழ் சாலை மேம்படுத்துவதற்காக ஒதுக்கீடு செய்யும் நிதியிலிருந்தும், மாநகராட்சி பொது நிதியிலிருந்தும், ஜெர்மானிய வங்கியின் நிதியுதவி மற்றும் நகர்ப்புற உள்கட்டமைப்புக்கான நீடித்த நிதியுதவி போன்ற பல்வேறு திட்டங்களின் கீழ் சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், தற்போது திருச்சியில் மாநகராட்சி சிறப்பு சாலைத் திட்டம் 2010-11 இன் கீழ் சாலைகளை மேம்படுத்தும் பணிகளை மேற்கொளள நகராட்சி நிர்வாக இயக்குநரால் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி அதாவது, 5 ஆண்டுகளுக்கு முன்னர் போடப்பட்ட சாலைகள், புதைச் சாக்கடை மற்றும் குடிநீர் விநியோகக் குழாய்கள் பதிப்பதற்காக தோண்டப்பட்ட சாலைகள், இயற்கை இடர்பாடுகளால் பழுதடைந்த சாலைகள் உள்ளிட்டவற்றை மேம்படுத்தும் வகையில் முன்னுரிமை அடிப்படையில் சாலைகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன.

அதன்படி, நான்கு கோட்டங்களிலும் சாலைகளைத் தேர்வு செய்யும் பணியை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆணையர் த.தி. பால்சாமி வியாழக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, நகரப் பொறியாளர் எஸ். ராஜா முகம்மது, செயற்பொறியாளர்கள் ஆர். சந்திரன், எஸ். அருணாசலம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

மாநகராட்சிப் பகுதியில் ரூ 60 கோடியில் தார்ச்சாலை இரு மாதங்களில் பணிகள் தொடக்கம்: ஆணையர்

Print PDF

தினமணி 28.04.2010

மாநகராட்சிப் பகுதியில் ரூ 60 கோடியில் தார்ச்சாலை இரு மாதங்களில் பணிகள் தொடக்கம்: ஆணையர்

மதுரை, ஆக. 24: மதுரை மாநகராட்சிப் பகுதியில் ரூ.60 கோடி மதிப்பில் 140 கிலோ மீட்டருக்கான தார்ச்சாலைப் பணிகள் இன்னும் 2 மாதங்களில் துவங்க வாய்ப்புள்ளது என, மாநகராட்சி கமிஷனர் எஸ்.செபாஸ்டின் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி: மதுரை மாநகராட்சிப் பகுதியில் பாதாளச் சாக்கடை திட்டம், கேபிள் வயர் பதிப்பு, குடிநீர்க் குழாய் பதிப்பது உள்ளிட்ட பணிகளுக்காக, பல்வேறு இடங்களில் குழிகள் தோண்டப்பட்டு சாலைகள் பழுதாகியுள்ளன.

இவற்றை சீரமைக்கும் விதமாக சிறப்புச்சாலை திட்டத்தின்கீழ், தமிழக அரசு மதுரை மாநகராட்சிக்கு ரூ. 60 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மாநகராட்சியில் உள்ள 72 வார்டுகளிலும் பழுதான சாலைகள் குறித்து கணக்கெடுத்து 140 கிலோ மீட்டர் வரை சாலைகள் அமைக்கும் பணி இன்னும் இரு மாதங்களில் துவங்கும்.

குழிகள் தோண்ட 5 ஆண்டுகளுக்கு தடை: இந்த தார்ச்சாலைப் பணிகள் முடிந்தவுடன் குடிநீர் இணைப்பு, பாதாளச் சாக்கடை இணைப்பு, கேபிள் பதிப்பது உள்ளிட்ட எந்தப் பணிகளுக்கும் குழிதோண்டுவதற்கு, அடுத்த 5 ஆண்டுகளுக்கு மாநகராட்சி பகுதிக்குள் தடை விதிக்கப்படும். எனவே, இதுபோன்றவற்றுக்கு தார்ச்சாலை அமைக்கும் முன்பே இணைப்புப் பெற்றுக்கொள்ள மக்கள் முன்வரவேண்டும்.

உயரக் கட்டடங்கள் கணக்கெடுப்பு: உயரக் கட்டுப்பாட்டு விதிமுறை மீறி சட்டத்துக்கு புறம்பாக கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் இடிக்கப்படும்.

நீதிமன்ற வழக்குகளால் மதுரை மாட்டுத்தாவணிக்கு மாற்றப்பட்டுள்ள சென்ட்ரல் காய்கறி மார்க்கெட் செயல்படுவதற்கு தாமதம் ஏற்பட்டு வருகிறது.

மேலும், மாநகராட்சிக்கு உள்பட்ட பூங்காக்கள், ஏரிகளை மேம்படுத்த மாநகராட்சி சார்பில் திட்டம் தயாரிக்கப்பட்டு, நிதி கோரி தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விரைவில், இதற்கான நிதியும் மதுரை மாநகராட்சிக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்குப் பின் பூங்காக்கள், ஏரிகள் மேம்படுத்தப்படும்.

வரி வசூல் தீவிரப்படுத்தப்படும்: மக்கள் தொகை கணக்கெடுப்பு உள்ளிட்டப் பணிகளால் சொத்து வரி உள்ளிட்ட பல்வேறு இனங்களில் நிலுவையில் உள்ள வரிகளை வசூல் செய்வதில் சிறிது தாமதம் ஏற்பட்டிருந்தது. ஆனால், வரிகளை வசூல் செய்வதில் தீவிரக் கவனம் செலுத்தி, மாநகராட்சிக்கான வருவாயைப் பெருக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றார் கமிஷனர் எஸ்.செபாஸ்டின்.

 

ரூ.24.66 கோடிக்கு ரோடு; தீர்மானம் நிறைவேறியது!

Print PDF

தினமலர் 25.08.2010

ரூ.24.66 கோடிக்கு ரோடு; தீர்மானம் நிறைவேறியது!

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி பகுதி களில் 24.66 கோடி ரூபாயில் ரோடு போடுவதற்காக, நேற்றைய அவசர கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருப்பூர் மாநகராட்சி மாமன்ற அவசர கூட்டம், மேயர் செல்வராஜ் தலைமையில் நேற்று நடந்தது; கமிஷனர் ஜெயலட்சுமி, துணை மேயர் செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். தமிழக அரசின் சிறப்பு சாலைகள் திட்டத்தில், திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் 24.66 கோடி ரூபாய் மதிப்பில் 90 கி.மீ., தூரத்துக்கு 109 பகுதிகளில் புதிதாக ரோடு போட அனுமதி அளிக்கப்படுகிறது. ஐந்து ஆண்டுக்கு முன் போடப்பட்டு, தற்போது பழுதடைந்துள்ள ரோடு மற்றும் போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த மண் ரோடுகளை தார் ரோடுகளாக அமைத்துக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூட்ட விவாதம் வருமாறு: ராதாகிருஷ்ணன் (.தி.மு..,): மாநகராட்சி பகுதிகளில், மண் ரோடுகளை மாற்றி புதிய ரோடு அமைத்தல்; பழுதடைந்த ரோடுகளை புதிதாக அமைத்தல் பணிகளுக்காக மதிப்பீடு செய்து, அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்படுகிறது. அனைத்து வார்டுகளிலும் இத்திட்டத்தில் ரோடுகளை சேர்க்கவில்லை. அனைத்து ரோடுகளையும் சேர்க்க முடியாமல் நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இன்னும் 25 கோடி ரூபாய் சிறப்பு நிதியாக ஒதுக்கி, விடுபட்ட மற்ற பகுதிகளையும் இத்திட்டத்தில் சேர்க்க வேண்டும். இத்திட்ட நிதியை 100 சதவீத மானியமாக வழங்க, இத்தீர்மானத்தில் அரசுக்கு கோரிக்கை வைக்க வேண்டும்.

மேயர்: தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் இத்திட்டத்தின் கீழ் பணி செய்ய ஆயிரம் கோடி ரூபாய் அரசு ஒதுக்கியுள்ளது. ஐந்தாண்டுக்கு முன் போடப்பட்டு பழுதடைந்துள்ள ரோடு; பிரதானமாக உள்ள மண் ரோடுகளை, இத்திட்டத்தில் தார் ரோடுகளாக அமைத்துக்கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அனைத்து கவுன்சிலர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து, கருத்துகள் கேட்டு திட்ட மதிப்பீடு தயாரானது. 90 கி.மீ., தூரத்துக்கு 24.66 கோடி ரூபாய் பணி செய்ய அரசு அனுமதிக்கிறது; இந்நிதி முழுவதும் அரசு மானியமாகவே வழங்குகிறது. இதற்காக, அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

இதில் விடுபட்ட பகுதிகளிலும் "டுரிப்' திட்டத்தின் கீழ் ரோடு, சாக்கடை பணிகள் நடக்கும். தங்கவேல் (மா. கம்யூ.,): தீர்மானத்தில் பணிகள் நடக்கும் வார்டுகள் எவை என குறிப்பிடவில்லை; எந்த ரோடும் ஐந்தாண்டு வரை நீடிக்காதபோது, எந்த அடிப்படையில் ஐந்தாண்டுக்கு முந்தைய ரோடுகளை வரையறுப்பது என தெரியவில்லை. ரோடு போடும் பணி துவங்கிய நாளா, முடிவடைந்த நாளா என தெளிவுபடுத்தவில்லை. இதனால், மோசடி நடக்கும்; குழப்பங்களும் ஏற்படும். இதற்கு மேயர் பதிலளிக்கையில், "வார்டு வாரியாக நிதியை பிரிக்கக்கூடாது என்பதால், பணி நடக்கும் பகுதி மட்டுமே தேர்வு செய்யப்பட்டது,' எனக்கூறி, 109 பகுதிகளுக்கான வார்டு எண்களை பொறுமையாக படித்து காட்டினார். ஈஸ்வரமூர்த்தி (மா. கம்யூ.,): இத்திட்டத்தில் எனது வார்டில் உள்ள பழுதடைந்த ரோடுகள் சேர்க்கப்பட வில்லை; கரையோர பகுதிகளான கே.வி.ஆர்., நகர், ஜீவா நகரில் மழை பெய்தால் வீடுகளுக்குள் கழிவுநீர் சென்று மக்கள் பாதிக்கப்படுகின்றனர். மக்களை பாதுகாக்கும் பொறுப்பு மாநகராட்சிக்கு உள்ளது. எனது வார்டில் பணிகள் சரிவர நடப்பதில்லை. நடராஜன் (இந்திய கம்யூ.,): தார் ரோடு அமைக்க 25 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியுள்ளது; மக்களுக்கு செய்ய வேண்டிய கடமையை, அரசு செய்திருப்பதை வரவேற்கிறோம். அதற்காக, அரசுக்கு நன்றி, பாராட்டு தெரிவித்து தீர்மானம் தேவையா என்ற கேள்வி எழுகிறது. மேயர் குறுக்கிட்டு,"கவுன்சிலர் ராதாகிருஷ்ணன் பேசுகையில், சிறப்பு சாலை திட்டத்துக்காக ஒதுக்கப்படும் 25 கோடி ரூபாய் நிதியை மானியமாக அரசு வழங்க கோரிக்கை வைக்க வேண்டும் என வலியுறுத்தினார்; அதற்கு, அந்நிதியை அரசு மானியமாக வழங்குவதை சுட்டிக்காட்டி, நன்றியும், பாராட்டும் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றலாம் என்று தெரிவித்தேன்,' என்றார். நடராஜன்: "டுரிப்' திட்டத்தில் 120 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் போடப்படும் ரோடு போல், சிறப்பு சாலை திட்டத்தில் போடப்படும் ரோடு, உலகத் தரம் வாய்ந்தவையாக இருக்குமா, சாதாரண முறையில் ரோடு போடப்படுமா என மாநகராட்சி தெளிவுபடுத்த வேண்டும். அதன்பின் பேசிய செழியன் (காங்.,), பழனிசாமி (தி.மு..,), கலிலுர் ரகுமான் (முஸ்லிம் லீக்) ஆகியோர், இத்திட்டத்துக்கு நன்றி தெரிவித்தனர். சாவித்திரி (மா. கம்யூ.,): வார்டில் பணிகள் சரிவர நடப்பது இல்லை. பழுதடைந்த ரோட்டை புதுப்பித்து தர, இத்திட்டத்தில் பாலம் பகுதி வழியாக செல்லும் ரோட்டை சேர்க்க வேண்டும்.இப்பிரச்னை குறித்து சாவித்திரி தொடர்ந்து கேள்வி எழுப்பியதை அடுத்து, குறிப்பிட்ட பகுதியை பார்வையிட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் தெரிவித்தார். தொடர்ந்து சாந்தாமணி, சிவபாலன் (.தி.மு..,) ஆகியோர், வார்டில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி பேசினர். துணை மேயர் செந்தில்குமார் (காங்.,): சிறப்பு சாலைகள் திட்டத்தில் சில பகுதிகளை சேர்க்க முடியாமல் நிதி பற்றாக்குறையாக உள்ளது என்பது உண்மை. அதேநேரத்தில், அங்கீகரிக்கப்படாத பகுதிகளை வரன்முறைப்படுத்தி இத்திட்டங்களை நிறைவேற்றுவதன் மூலம், அப்பகுதிகளில் போதிய வசதிகள் ஏற்படும்; இத்திட்டத்தை வரவேற்கிறோம். அடுத்து வர உள்ள மத்திய அரசின் திட்டங்களால், வளர்ச்சி பணி முழுமை யடையாத மற்ற வார்டுகளிலும், இப்பணி நடக்க வாய்ப்பு ஏற்படும், என்றார்.மொபைல் போனை தவிர்க்கலாமே! கூட்டம் துவங்கியதில் இருந்து பல கவுன்சிலர்களின் மொபைல் போன்கள் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருந்தன. இதனால், மைக்கில் பேசிய கவுன்சிலர்கள், பதிலளித்த மேயரின் கவனம் தடைபட்டு கொண்டே இருந்தது. சில கவுன்சிலர்கள், கூட்டம் நடந்த அரங்கில் அமர்ந்தபடியே போனில் பேசினர். சிலர், ஒலித்த போன்களை கண்டுகொள்ளாமல், கூட்டத்தை கவனித்துக் கொண்டிருந்தனர். மக்கள் பிரச்னைகளை பேசும் இடத்தில், மொபைல் போனை "சைலண்டில்' வைக்கலாம் அல்லது, அவர்களது உதவியாளர், உறவினர்கள் பார்வையாளர்களாக அமர்ந்திருப்பதால், சில மணி நேரத்துக்கு மொபைல் போனை அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு, மக்கள் பிரச்னையில் கவனம் செலுத்தலாம். இனியாவது கவுன்சிலர்கள், இதை பின்பற்றுவார்களா?

 


Page 100 of 167