தினகரன் 30.07.2010
தரம் உயர்த்தப்பட்ட சாலைகளில் ஸி60 லட்சத்தில் புதிய குறியீடுகள்
புதுடெல்லி, ஜூலை 30: தெற்கு டெல்லியில் தரம் உயர்த்தப்பட்ட சாலைகளில் ஸி 60 லட்சம் செலவில் சாலை விதிகள் பற்றி குறியீடுகள் வரையப்படவுள்ளது.
டெல்லியில் அக்டோபர் 3ம் தேதி முதல் 14ம் தேதி வரையில் காமன்வெ ல்த் போட்டிகள் நடைபெறுகின்றன. இதையொட்டி, நடந்து வரும் வளர்ச்சிப் பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன.
இந்நிலையில், தெற்கு டெல்லியில் மேம்படுத்தப்பட்ட மற்றும் புதிதாக அமைக்கப்பட்ட சாலைகளில் சாலை விதிகளை விளக்கும் பல்வேறு குறியீடுகளை புதிதாக வரைய மாநகராட்சி முடிவு செய்தது.
இதற்கு ஒப்புதல் வழங்கும் தீர்மானம், மாநகராட்சி நிலைக்குழு கூட்டத்தில் நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி, தெற்கு டெல்லியில் உள்ள தமிழ்ச்சங்கம் சாலை, அரபிந்தோ சாலை, வசந்த் சாலை உள்ளிட்ட பல சாலைகளில் புதிய குறியீடுகள் வரையப்படவுள்ளன. இதற்கு, தெர்மாபிளாஸ்டிக் பெயிண்டை பயன்படுத்துவது எனவும் நிலைக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இந்தப் பணியை நிறைவேற்றி முடிக்கும் பொறுப்பு, தனியார் நிறுவனம் வசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணியை
ஸி 60.66 லட்சம் செலவில் நிறைவேற்றித் தருவதாக அந்த நிறுவனம் ஒப்பந்தத்தை பெற்றுள்ளது என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.