Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

பழனியில் தார்ச் சாலை அமைக்கும் பணிகள்

Print PDF

தினமணி 24.04.2010

பழனியில் தார்ச் சாலை அமைக்கும் பணிகள்

பழனி, ஏப். 23: பழனி அடிவாரம் பகுதியில் ரூ.20 லட்சம் செலவில் நவீன தார் சாலை அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை துவங்கியது.

பழனி அடிவாரம் மற்றும் திருஆவினன்குடி கோயிலில் இருந்து கிரிவீதி வரையிலான அய்யம்புள்ளி சாலை பிரதானமானதாகும். விழாக்காலம் மட்டுமின்றி சாதாரண காலங்களில்கூட இந்த சாலையை பக்தர்கள், பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.

இந்த சாலை கடந்த 11 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட நிலையில் மிகவும் சேதமடைந்து காணப்பட்டது. இந்த சாலை விழாக் காலங்களில் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. இதைச் சீர்செய்ய பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகத்தின் முயற்சியால் ஆட்சியரின் உத்தரவின் பேரில் பிற்படுத்தப்பட்ட மானிய மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.20 லட்சம் செலவில் நவீன தார் சாலை அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை துவங்கியது.

இந்த சாலை சுமார் 9 மீட்டர் அகலமும், 255 மீட்டர் நீளமும் கொண்டது. இங்கு நவீன பேவர் இயந்திரம் மூலம் நடைபெற்ற தார்சாலை அமைக்கும் பணிகளை நகர்மன்றத் தலைவர் ராஜமாணிக்கம், ஆணையர் மூர்த்தி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

அப்போது நகர்மன்றப் பொறியாளர் முத்து, உதவிப் பொறியாளர் சரவணன், 32-வது வார்டு கவுன்சிலர் கிருஷ்ணவேணி தீனதயாளன் உள்பட பலர் உடனிருந்தனர்.

 

நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கும்பகோணம் நகராட்சி சாலைகள் : மாற்றியமைக்க முடிவு: அதிகாரி தகவல்

Print PDF

தினமலர் 24.04.2010

நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கும்பகோணம் நகராட்சி சாலைகள் : மாற்றியமைக்க முடிவு: அதிகாரி தகவல்

கும்பகோணம்: நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கும்பகோணம் நகராட்சி சாலைகள் சர்வதேச தரத்திற்கு இணையாக மேம்படுத் தப்படும் என திட்ட மேலாளர்
முருகன் தெரிவித்தார்.தமிழ்நாடு நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கும்பகோணம் நகராட்சிக்கு உட்பட்ட சாலைகளை மேம்பாடு செய்வது தொடர்பான கலந்தாலோசனை கூட்டம் நேற்று நடந்தது. திட்ட செயல்பாடுகள் குறித்து நிறுவன திட்ட மேலாளர் முருகன் கூறியதாவது:கும்பகோணம் நகரில் உள்ள சாலைகள் சராசரியாக 6மீ. அகலத் தில் தான் உள்ளது. பெருகி வரும் சாலை போக்குவரத்தை கருத்தில் கொண்டு அடுத்த 20 ஆண்டு காலத்திற்கு நெரிசலை தவிர்ப்பதற்கு மேம்பாடு பணிகளை மேற் கொள்வது தான் இத்திட்டத்தின் நோக்கம். இதற்கென சர்வதேச தரத்திற்கு இணையாக சாலைகள் அமைக்கப் பட உள்ளது.

இது தொடர்பான அறிக்கையை அடுத்தவாரம் அரசுக்கு அனுப்ப உள்ளோம். இத்திட்டத்தின் கீழ் நகரில் என்னென்ன சாலைகள் தேவை என கணக்கெடுக்கப்பட்டுள்ளது. அனைத்து சாலைகளை பற்றி விபரங்கள் கணக்கெடுக்கப்பட்டு வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது. அரசிடம் இருந்து அனுமதி வரப் பெற்றதும் இன்னும் 3 மாதங்களில் ஆயத்தப் பணிகள் தொடங்கப்படும். நகர சாலைகள் மட்டுமின்றி மாநில நெடுஞ்சாலை, தேசிய நெடுஞ்சாலைகளும் இத்திட்டத் தில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. அந்த வகையில் 6 நெடுஞ்சாலைகளும், 12 இணைப்பு சாலைகளும் எடுத்துக் கொள்ளப்படுகிறது. நகரின் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு 4 வழி சாலைகள் அமைய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அந்தந்த சாலைகளின் அகலத்திற்கேற்ப 4 நிலைகளில் மேம்பாடு செய்யப்படுகிறது. காவிரி, அரசலாறுகளை ஒட்டி போக்குவரத்து மாற்றத்திற்கு தேவையான கூடுதல் புதிய சாலை அமைக்கப்பட உள்ளது.

ஸ்டேட் பாங்க் காலனி அய்யப் பன் நகரை இணைக்கும் வகையில் புதிய பாலம் அமைக்கப்பட உள்ளது. ஏற்கனவே நகரில் உள்ள 3 பாலங்களும் புதுப்பிக்கப்படும். காசிராமன் தெரு, ஆயிகுளம் ஆகிய 2 இடங்களில் சுரங்க நடைபாதை அமைக்கப்படும். மாரியம் மன் கோவில் தெருவில் ரயில்வே லெவல் கிராசிங்கில் உயர்மட்ட மேம்பாலமும், நகர் முழுவதும் 22 சாலையோர பூங்காக் கள் மூலம் சென்னை, கோவை மாநகரை போல அழகுபடுத்தப்படும். தனியார் நிறுவனங்களின் உதவியுடன் ஸ்டீல் மேல் கூரை கொண்ட பயணிகள் நிழற்குடையும், எந்தவித சுவரொட்டிகளும் எங்கும் ஒட்டாத வகையில் தடை செய்யப் பட்டு பொது இடங்களில் டிஜிட்டல் விளம்பர பலகைகள் மூலம் மட்டும் ஒளிபரப்ப வழிவகை செய்யப்படும். நகரில் பயன்பாட்டில் இல்லாத 4 கழிவுநீர் வாய்க்கால்களின் அளவுகளை குறைத்து புதிய சாலை வசதி செய்யப்படும். இப்பணிகள் அனைத்தும் இன்னும் 3 மாதங்களில் தொடங் கப்பட்டு 3 ஆண்டுகளில் செய்து முடிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.நகராட்சி தலைவர் தமிழழகன் தலைமை வகித்து பேசினார். ஆணையர் பூங்கொடி மற்றும் அலுவலர்கள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

Last Updated on Saturday, 24 April 2010 06:02
 

"பெரம்பலூர் நகராட்சியில் ரூ.1.58 கோடியில் புதிய தார்ச் சாலை'

Print PDF

தினமணி 22.04.2010

"பெரம்பலூர் நகராட்சியில் ரூ.1.58 கோடியில் புதிய தார்ச் சாலை'

பெரம்பலூர், ஏப். 21: பெரம்பலூர் நகராட்சிக்குள்பட்ட 16 வார்டுகளில் ரூ.1.58 கோடியில் புதிய தார்ச் சாலைகள் அமைக்கப்படும் என்றார் நகராட்சித் தலைவர் எம்.என். ராஜா.

பெரம்பலூர் நகராட்சி கூட்ட அரங்கில், நகராட்சியின் அவசரக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, நகராட்சித் தலைவர் எம்.என். ராஜா தலைமை வகித்தார். துணைத் தலைவர் கி. முகுந்தன், ஆணையர் அ. அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் 11-வது வார்டு விளாமுத்தூர் சாலை முதல் ராஜன் பெட்ரோல் பங்க் வரை ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் வடிகால் அமைப்பது. பெரம்பலூர் கனரா வங்கி முதல் காமராஜர் சிலை வரை ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் தார்ச் சாலையை மேம்படுத்துவது. வார்டு 1-ல் உள்ள கல்யாண் நகரில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார்ச் சாலை அமைப்பது என்பன உள்ளிட்ட 39 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னர், செய்தியாளர்களிடம் நகராட்சித் தலைவர் எம்.என். ராஜா கூறியது:

பெரம்பலூர் நகராட்சிக்குள்பட்ட 1, 2, 3, 4, 5 மற்றும் 13-வது வார்டுகளைத் தவிர மீதமுள்ள 15 வார்டுகளிலும் ரூ.1.58 கோடியில் புதிய தார்ச் சாலை அமைக்கப்பட உள்ளது.

இதன்மூலம், பெரம்பலூர் நகராட்சிகுள்பட்ட பகுதிகளில் 80 சதம் சாலைப் பணிகள் நிறைவு பெறும். கொள்ளிடத்தில் இருந்து பெரம்பலூருக்கு கொண்டுவரப்படும் குடிநீர், பல்வேறு கிராமப் புறங்களுக்கு விநியோகிக்கப்படுவதால், பெரம்பலூர் நகர மக்களுக்கு போதுமான குடிநீர் விநியோகிக்க முடியவில்லை. எனவே, குடிநீர் பற்றாக்குறையைப் போக்க, கொள்ளிடத்தில் இருந்து பெரம்பலூருக்கு தனி குடிநீர் குழாய் அமைக்க அனுமதி கோரப்பட்டுள்ளது.

பெரம்பலூர் நகரில் வெறி நாய்களின் தொல்லைகளைக் கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் மூலம், நாய்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்யப்படும் என்றார் அவர்.

கூட்டத்தில் நகராட்சிப் பொறியாளர் மணிமாறன், எழுத்தர் தங்கராசு, நகராட்சி உறுப்பினர்கள் ஆர்.டி. ராமச்சந்திரன், ஆர். சரவணன், கே. கனகராஜ், ஜி. பொற்கொடி, பி. கண்ணகி, பி. அன்புதுரை, ஜே.எஸ்.ஆர். கருணாநிதி, கே.ஜி. மாரிக்கண்ணன், எம். ரமேஷ்பாண்டியன், ஆர். ஈஸ்வரி, கே. புவனேஸ்வரி, என். ஜெயக்குமார், கே. பேபிகாமராஜ் உள்ளிட்ட நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Last Updated on Thursday, 22 April 2010 09:53
 


Page 129 of 167