தினமணி 24.04.2010
பழனியில் தார்ச் சாலை அமைக்கும் பணிகள்
பழனி, ஏப். 23: பழனி அடிவாரம் பகுதியில் ரூ.20 லட்சம் செலவில் நவீன தார் சாலை அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை துவங்கியது.
பழனி அடிவாரம் மற்றும் திருஆவினன்குடி கோயிலில் இருந்து கிரிவீதி வரையிலான அய்யம்புள்ளி சாலை பிரதானமானதாகும். விழாக்காலம் மட்டுமின்றி சாதாரண காலங்களில்கூட இந்த சாலையை பக்தர்கள், பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.
இந்த சாலை கடந்த 11 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட நிலையில் மிகவும் சேதமடைந்து காணப்பட்டது. இந்த சாலை விழாக் காலங்களில் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. இதைச் சீர்செய்ய பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகத்தின் முயற்சியால் ஆட்சியரின் உத்தரவின் பேரில் பிற்படுத்தப்பட்ட மானிய மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.20 லட்சம் செலவில் நவீன தார் சாலை அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை துவங்கியது.
இந்த சாலை சுமார் 9 மீட்டர் அகலமும், 255 மீட்டர் நீளமும் கொண்டது. இங்கு நவீன பேவர் இயந்திரம் மூலம் நடைபெற்ற தார்சாலை அமைக்கும் பணிகளை நகர்மன்றத் தலைவர் ராஜமாணிக்கம், ஆணையர் மூர்த்தி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
அப்போது நகர்மன்றப் பொறியாளர் முத்து, உதவிப் பொறியாளர் சரவணன், 32-வது வார்டு கவுன்சிலர் கிருஷ்ணவேணி தீனதயாளன் உள்பட பலர் உடனிருந்தனர்.