தினமலர் 17.04.2010.
நாளை மறுநாள் மாநகராட்சி கூட்டம் 12 ரோடுகள் சீரமைக்க 2 கோடி அனுமதி : பக்கிள் ஓடை இரண்டாம் கட்ட பணி துவக்க ஆயத்தம்
தூத்துக்குடி : தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் வரும் 19ம் தேதி நடக்கிறது. இந்த கூட்டத்தில் 2 கோடி ரூபாய் செலவில் 12 ரோடுகள் அமைப்பதற்கு அனுமதியளித்து தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் வரும் 19ம் தேதி கூட்ட அரங்கில் மேயர் கஸ்தூரிதங்கம் தலைமையில் நடக்கிறது. துணைமேயர் தொம்மைஜேசுவடியான், கமிஷனர் குபேந்திரன், இன்ஜினியர் ராஜகோபாலன், சுகாதார அதிகாரி (பொ) திருமால்சாமி மற்றும் அதிகாரிகள், கவுன்சிலர்கள் கலந்து கொள்கின்றனர்.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் சுமார் 85 கோடி ரூபாய் செலவில் நடந்து வரும் பாதாள சாக்கடை திட்ட பணிகள் முடியும் தருவாயை எட்டிக் கொண்டிருக்கிறது. இதனால் பாதாள சாக்கடை திட்டத்தால் சேதமாகிய ரோடுகளை சீரமைப்பு செய்யும் பணிகளில் மாநகராட்சி துரித நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.ஏற்கனவே சுமார் 12 கோடியில் மாநகராட்சி பகுதியில் ரோடுகள் சீரமைப்பு செய்ய அரசிடம் இருந்து சிறப்பு நிதி பெறுவதற்கான தீர்மானம் நிறைவேற்றபட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாளை மறுநாள் நடக்கும் மாநகராட்சி கூட்டத்தில் அமெரிக்கன் ஆஸ்பத்திரி மெயின் ரோடு, ஸ்டேட் பாங்க் காலனி முதல் எட்டயபுரம் ரோடுவரை, அம்பேத்கர்நகர் மெயின் ரோடு முதல் ஸ்டேட் பாங்க் காலனி சந்திப்பு வரை, டி.எஸ்.எப் சந்திப்பு முதல் அம்பேத்கர்நகர் மெயின் ரோடு சந்திப்பு வரை, கிருஷ்ணராஜபுரம் முதல் டி.எஸ்.எப் சந்திப்பு வரைஎஸ்.எஸ்.மாணிக்கபுரம் மெயின் ரோடு, சாமுவேல்புரம் முதல் கிருஷ்ணராஜபுரம் வரை, அண்ணாநகர் 5வது குறுக்குத்தெரு, ராமேஸ்வரம் மெயின் ரோடு அமெரிக்கன் ஆஸ்பத்திரி சந்திப்பு முதல் செயின்ட் தாமஸ் பள்ளி வரை, சிவந்தாகுளம் மெயின் ரோடு, போல்டன்புரம் 2வது தெரு, கணேஷ்நகர் மெயின் ரோடுராமசாமிபுரம் முதல் சிதம்பர நகர் மொத்தம் 12 இடங்களில் ரோடு போட ஒரு கோடியே 95 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் அனுமதிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. இந்த பணியினை உள்ளூர் திட்டக்குழுமம் நிதியினை பெற்று பணிகள் செய்ய கூட்டத்தில் முடிவு செய்யப்படுகிறது.
மாநகராட்சி பகுதியில் உள்ள பக்கிள் ஓடையில் முதல் கட்டமாக 1.82 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேம்பாட்டு பணிகள் 6 கோடியே 98 லட்சத்தில் செய்து முடிக்கப்பட்டுள்ளது. தற்போது இரண்டாம் கட்டமாக 2.4 கிலோ மீட்டர் நீளத்திற்கு பக்கிள் ஓடை சீரமைப்பு செய்யும் பொருட்டு சிமென்ட்தளம், சிறு கால்வாய் கட்டும் பணிகளுக்கு 7 கோடியே 50 லட்ச ரூபாயிற்கு அரசு அனுமதியளித்துள்ளது.இந்த நிதியில் 6 கோடி ரூபாய் கேளிக்கை வரி ஈடுசெய்யும் நிதியில் இருந்து மானியமாகவும், மீதியுள்ள தொகை ஒரு கோடியே 50 லட்சத்தை மாநகராட்சி பொது நிதியில் இருந்து செலவு செய்யவும் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக வந்த அரசாணை கூட்டத்தில் வைக்கப்பட்டு முடிவு செய்யப்படுகிறது.
கூட்டத்தில் 2010-2011ம் ஆண்டின் உத்தேச வரவு செலவு மதிப்பீடு மற்றும் 2009-2010 ஆண்டு திருத்திய வரவு செலவு மதிப்பீடு ஆகியவற்றிற்கும் ஒப்புதல் பெறும் தீர்மானத்திற்கும் ஒப்புதல் அளிக்கப்படுகிறது.