Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

திட்டச்சாலைகள் அமைக்க அரசாணை; ரூ.13.25 கோடி நிதி ஒதுக்கீடு

Print PDF

தினமலர் 24.03.2010

திட்டச்சாலைகள் அமைக்க அரசாணை; ரூ.13.25 கோடி நிதி ஒதுக்கீடு

கோவை, : கோவை நகரில் முதன் முறையாக, உள்ளூர் திட்டக்குழும நிதியில், 13 கோடியே 25 லட்ச ரூபாய் மதிப்பில் 3 இணைப்புச் சாலை அமைக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோவை நகர முழுமைத் திட்டத்தில் உத்தேச திட்டச்சாலையாக பல இடங்கள் காண்பிக்கப்பட்டாலும், அவை காகிதங்களில் மட்டுமே உள்ளன. இவை அமைக்கப்படாததால் மக்களும் கடும் அவதிக்குள்ளாகின்றனர். திட்டச்சாலை அமைக்க வேண்டிய கடமை, மாநகராட்சி நிர்வாகத்துக்கு உள்ளது. ஆனால், நிதிப்பற்றாக்குறையை காரணம் காட்டி, இந்த வேலையை மாநகராட்சி நிர்வாகம் தொடுவதே இல்லை. இதற்கான நிதி வழங்க வேண்டிய உள்ளூர் திட்டக் குழுமமும் இதற்காக மெனக்கெடுவதில்லை.
அதனால், கோவை உள்ளூர் திட்டக்குழுமத்தில் மேம்பாட்டுக் கட்டணமாக பெறப்பட்ட 20 கோடி ரூபாய் நிதி, பல ஆண்டுகளாக முடங்கிக் கிடந்தது.

இந்த நிதியைப் பயன் படுத்தி, 3 திட்டச்சாலை அமைக்க, கலெக்டர் உமாநாத் முயற்சி எடுத்தார்; அதற்கேற்ப, செம்மொழி மாநாடும் அறிவிக்கப்பட்டது. செம்மொழி மாநாட்டுக்காக, கோவை நகரில் 300 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. இதே காலகட்டத்தில், இந்த திட்டச்சாலைகள் அமைக்க வேண்டியதன் அவசியம் பற்றி அரசுக்கு கலெக்டர் வலியுறுத்தினார். அதன் பலனாக, மூன்று திட்டச்சாலை அமைக்க தமிழக அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை சார்பில், மார்ச் 22ல் ஓர் அரசாணை (எண்:65) பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்காக, 13 கோடியே 25 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரங்கவிலாஸ் மில் திட்டச்சாலைக்கு 6 கோடியே 77 லட்ச ரூபாயும், நவ இந்தியா ரோடுக்கு 5 கோடியே 80 லட்ச ரூபாயும், மசக்காளிபாளையம் திட்டச்சாலைக்கு 68 லட்ச ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

நிலங்களை கையகப்படுத்த ஒதுக்கியுள்ள தொகை, 4 கோடியே ஒரு லட்ச ரூபாய். ரோடு அமைத்தல், பாலங்கள், தெரு விளக்கு, சாக்கடை வசதி ஆகியவை அனைத்துக்கும் சேர்த்து 9 கோடியே 24 லட்ச ரூபாய் ஒதுக்கப்படுகிறது.
இந்த நிதியை கோவை உள்ளூர் திட்டக்குழும நிதியிலிருந்து ஒதுக்க, இந்த அரசாணையில் ஒப்புதல் தரப்பட்டுள்ளது.

செம்மொழி மாநாட்டு சிறப்பு அலுவலரின் பரிந்துரையின் பேரில், இந்த அரசாணை பிறப்பிக்கப்படுவதாக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை செயலர் அசோக் டோங்ரே தெரிவித்துள்ளார். இந்த 3 இணைப்புச் சாலைகளை அமைக்கும் பணியை, மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளும். மேம்படுத்தப்படவுள்ள இந்த 3 திட்டச்சாலைகளில் ரங்கவிலாஸ் மில்ரோடு, அவினாசி ரோட்டையும், திருச்சி ரோட்டையும் இணைக்கும். அவினாசி ரோட்டையும், சின்னச்சாமி ரோட்டையும் இணைக்கும் வகையில் 100 அடி அகலத்தில் நவ இந்தியா ரோடு அமைக்கப்படும்.

மசக்காளிபாளையம் திட்டச்சாலையின் ஒரு பகுதி, 60 அடிக்கு அகலமாகும். இந்த 3 இணைப்புச் சாலைகள் அமைவதால், அவினாசி ரோடு, திருச்சி ரோடு மற்றும் சத்தி ரோட்டில் ஓரளவுக்கு நெரிசல் குறையும். பல ஆண்டுகளாக கனவாயிருந்த இந்த 3 ரோடுகளும், செம்மொழி மாநாட்டால் நனவாகின்றன.

இன்னும் இருக்கு பல கோடி! கோவை உள்ளூர் திட்டக்குழுமத்திடம் இருந்த 20 கோடி ரூபாய் நிதியில், 13 கோடியே 25 லட்ச ரூபாய், இந்த ரோடுகளுக்காக ஒதுக்கப்பட்டு விட்டது. இதேபோன்று, நகர ஊரமைப்புத்துறையின் நிதியிலிருந்து 26 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, மேலும் பல ரோடுகளும் மேம்படுத்தப்படுகின்றன. தமிழகத்திலேயே சென்னைக்கு அடுத்ததாக கோவை நகரிலிருந்தே அதிகமான அளவுக்கு 45 கோடி ரூபாய், கட்டமைப்பு நிதியாக வசூலிக்கப்பட்டுள்ளது. அனுமதியில்லாமலும், விதிமீறியும் கட்டிய கட்டடங்களில் இருந்து இன்னும் பல கோடி ரூபாய் நிதி வசூலிக்க வேண்டியுள்ளது. அந்த நிதியை வசூலித்தாலே, கோவை நகரில் இன்னும் ஏராளமான மேம்பாட்டுப் பணிகளைச் செய்வதற்கான நிதி கிடைத்து விடும்.

Last Updated on Wednesday, 24 March 2010 10:38
 

11 நகராட்சியில் உலக தரத்துடன் சாலைகள் இன்மாஸ் நிறுவன திட்ட மேலாளர் தகவல்

Print PDF

தினமலர் 19.03.2010

11 நகராட்சியில் உலக தரத்துடன் சாலைகள் இன்மாஸ் நிறுவன திட்ட மேலாளர் தகவல்

கும்பகோணம்: ''தமிழகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட கும்பகோணம் உட்பட 11 நகராட்சி பகுதியில் இரண்டாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் உலக தரத்துக்கு இணையான சாலை மேம்பாட்டு திட்டப்பணிகள் செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது,'' என இன்மாஸ் நிறுவனத்தின் திட்ட மேலாளர் முருகன் தெரிவித்தார். கும்பகோணம் நகராட்சியில் தமிழ்நாடு நகர்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இன்மாஸ் நிறுவனம் சார்பில் வரும் 20 ஆண்டுகளுக்கு உழைக்க கூடிய சாலை மேம்பாட்டு பணிகள் உட்பட பல வசதிகளை இந்நகராட்சி பகுதியில் செய்வதற்காக அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்ற கலந்தாய்வுக்கூட்டம் கும்பகோணத்தில் நடந்தது.நகராட்சி தலைவர் தமிழழகன் தலைமை வகித்தார். நகராட்சி கமிஷனர் பூங்கொடி அருமைக்கண் வரவேற்றார். திருவிடைமருதூர் யூனியன் தலைவர் ராமலிங்கம், தாசில்தார் போஸ், நகராட்சி துணைத்தலைவர் தர்மபாலன், நகராட்சி நகரமைப்பு முதுநிலை மேலாளர் கோபாலகிருஷ்ணன், ஓய்வு பெற்ற பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி, மின்வாரிய பொறியாளர் ஸ்ரீதர், போலீஸ் எஸ்.., சாமிநாதன் உட்பட பலர் பங்கேற்றனர். இன்மாஸ் நிறுவன திட்ட மேலாளர் முருகன் பேசியதாவது: தமிழ்நாடு நகர்புற சாலை மேம்பாடு திட்டம் தமிழக அரசால் இரண்டு ஆண்டுக்கு முன் கொண்டு வரப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் தமிழகத்தில் உள்ள கும்பகோணம் உட்பட 11 நகராட்சிகள் தேர்வு செய்து அங்கு உலக தரம் வாய்ந்த சாலை மேம்பாடு செய்தல், சாலையோர பூங்கா, நடைபாலம், சுரங்கபாதை, மேம்பாலம் உட்பட அனைத்து வசதிகளை ஒருங்கே அமைக்க இரண்டாயிரம் கோடி ரூபாய் அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

இத்திட்டத்தை ஓராண்டுக்குள் செயல்படுத்த இன்மாஸ் நிறுவனம் கடந்த இரு மாதமாக கும்பகோணம், மயிலாடுதுறை, தஞ்சாவூர் நகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து சாலைகள் இருக்கும் விதம், வடிகால்கள், வாய்கால்கள், போக்குவரத்து அதிகம் உள்ள பகுதி ஆய்வு செய்து டிஜிட்டல் முறையில் தயாரித்துள்ளோம். பூமிக்கு கீழே குடிநீர் இணைப்பு, கழிவு நீர் இணைப்பு, டெலிஃபோன் இணைப்பு, மின்சார கம்பிகள் அமைக்க வசதியாக 'டக்ட்' முறை பயன்படுத்தப்படும். தேசிய நெடுஞ்சாலையில் செய்யப்படும் பணிகள் செய்வதுபோல் நகராட்சியில் செய்யப்படும். தற்போது உள்ள சாலையின் தரம் இரண்டு, மூன்று ஆண்டுகளுக்குள் கெட்டு விடுகிறது. இத்திட்டத்தில் அமையும் சாலைகள் 20 ஆண்டு நீடித்து இருக்கும். தொலைநோக்கு பார்வையில் உலக தரத்துக்கு இணையான சாலைகள் அமைக்கவேண்டும் என்பது அரசின் நோக்கமாக உள்ளது.

அதற்காக இப்பகுதியில் ஆய்வு செய்கிறோம். இந்நகரில் 173 கி.மீ., தூரம் சாலைகள், 780 தெருக்கள் உள்ளன. சாலையின் அகலம் குறுகலாக உள்ளது. இங்கு ஏழு வாய்கால்கள் தண்ணீர் ஓடாமல் உள்ளது. அதை தூர் எடுத்து சரி செய்யவேண்டும். டக்ட் சிஸ்டம் முறையில் சாலைக்கு கீழே மின்வாரியம், தொலைபேசி, குடிநீர் குழாய்கள் அமைப்பது என ஒவ்வொரு துறைக்கும் டக்ட் வசதி ஒதுக்கப்படும். இணைப்பு சாலை வசதிகள் அதை ஒட்டியிருக்கின்ற பகுதியில் வடிகால்கள், பஸ் குடைகள் அமைக்கவேண்டும். இந்த நகராட்சியில் உள்ள அனைத்து சாலைகளும் 100 சதவீதம் தரமானதாக அமைக்க வேண்டும் என்பதற்காக அனைத்து தகவல்களையும் சேகரித்து டிஜிட்டல் முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து முதல் அறிக்கை அரசிடம் அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை தயாரித்து எங்கள் மூலம் ஒப்பந்தக்காரர்கள் தேர்வு செய்யப்பட்டு திட்டம் தொடங்கி முடிந்தவுடன் அதிலிருந்து ஐந்தாண்டு பராமரிப்பு பணியும் செய்யப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Last Updated on Friday, 19 March 2010 06:31
 

ரூ. 2,000 கோடியில் சாலை மேம்பாட்டுப் பணிகள்

Print PDF

தினமணி 17.03.2010

ரூ. 2,000 கோடியில் சாலை மேம்பாட்டுப் பணிகள்

கும்பகோணம், மார்ச் 16: கும்பகோணம் உள்ளிட்ட 11 முக்கிய நகராட்சிப் பகுதிகளில் ரூ. 2,000 கோடியில் சாலை மேம்பாட்டுப் பணிகளைச் செயல்படுத்த ஆய்வறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது என்றார் ஆய்வு நிறுவன இன்மாஸ் நிறுவனத் திட்ட மேலாளர் முருகன்.

தமிழ்நாடு நகர்புறச் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் பாரம்பரியம் மிக்க நகரங்கள் உள்ளிட்ட நகர் பகுதிகளில் உலகத் தரத்திற்கு இணையான சாலைகளை அமைப்பதற்காக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி, கும்பகோணம் நகராட்சிப் பகுதியில் இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான அனைத்துத் துறை அதிகாரிகள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.

கும்பகோணம், தஞ்சாவூர், மயிலாடுதுறை நகராட்சிப் பகுதிகளில் இத் திட்டப் பணிகளை ஆய்வு செய்து வரும் நிறுவனமான இன்மாஸின் திட்ட மேலாளர் முருகன் கூறியது:

கும்பகோணம் உள்ளிட்ட 11 நகராட்சி பகுதிகளில் இத்திட்டத்தைச் செயல்படுத்த அரசு ரூ. 2,000 கோடி ஒதுக்கியுள்ளது. எதிர்வரும் 20 ஆண்டுகாலம் உழைக்கக்கூடிய அளவில், சாலைகள் உலகத் தரத்திற்கு இணையாக இருக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

வெளிநாடுகளில் பூமிக்கு அடியில் தொலைபேசி வயர்கள், மின் வயர்கள் உள்ளிட்டவை "டக்ட்' முறையில் செயல்படுத்தப்படுகின்றன. இந்த முறையை மேற்கண்ட நகரங்களிலும் செயல்படுத்துவற்காக அனைத்து துறை அதிகாரிகளின் ஆலோசனைகளைப் பெறும் கூட்டமாக நடைபெற்றது.

குடிநீர், கழிவுநீர்,புதைச் சாக்கடைத் திட்டம், வடிகால், மின் வயர்கள், கேபிள், தொலைபேசி போன்றவை டக்ட் முறையில் அமைக்கப்பட்டால் தரமானதாக இருக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு, இப்பகுதியில் கடந்த 2 மாதங்களாக ஆய்வு செய்தோம். அதன் முதல் அறிக்கை அரசிடம் அளிக்கப்பட்டுள்ளது. இந்நகரில், 7 வாய்க்கால்கள் உள்ளன. அவற்றைச் சீரமைத்து நடைப்பாலம், மேம்பாலம், சாலையோரப் பூங்கா, சுரங்கப் பாதை,போன்றவை அமைத்து நகர் மேம்படுத்தப்படும் என்றார் அவர்.

இதுகுறித்து நகர்மன்ற உறுப்பினர்கள் தெரிவித்தது:

சுந்தரபாண்டியன்: நெருக்கடியான இடங்களில் மேம்பாலம் அமைக்க வேண்டும்.

ரவிச்சந்திரன்: என் வார்டு பகுதியில் புதைச் சாக்கடைக் குழாய் பதிக்கவில்லை. தேவையில்லாத இடங்களில் உள்ள நிழல்குடைகளை எடுத்துவிட்டு, தேவையான இடத்தில் அமைக்க வேண்டும்.

வசீகரன்: (கட்டடக் கலை பொறியாளர்) இத்திட்டத்தில் நகர் பகுதிகளை மட்டும் எடுத்துக் கொள்ளாமல், அருகிலுள்ள பேரூராட்சி, ஊராட்சிப் பகுதிகளையும் சேர்க்கலாம். நகருக்கு வெளியே பேருந்து நிலையம் அமைத்து, போக்குவரத்து நெரிசலைக் குறைக்க வேண்டும். லஷ்மி விலாஸ் தெருவில் உள்ள திரையரங்கம் அருகில் ஓடும் கழிவு நீர்வாய்க்காலைச் சீரமைத்து, சாலை அமைத்தால் புதிய சாலை வசதி கிடைக்கும்.

வட்டாட்சியர் போஸ்: ஏ.ஆர்.ஆர். சாலை, செல்வம் திரையரங்க முகப்பு, பாலக்கரை ஆகிய இடங்களில் சிக்னல்கள் அமைக்க வேண்டும், தாராசுரம் சுங்கான்கேட், தாலுக்கா காவல் நிலையம் முன்புறம், மௌனசாமி மடத்துத்தெரு ஆகிய இடங்களில் வேகத் தடை அமைக்க வேண்டும். அரசு மருத்துவமனை, மூர்த்தி ரோடு வளைவு,நால் ரோடு ரவுண்டானா ஆகிய பகுதிகளில் நிரந்தரத் தடுப்பு அமைக்க வேண்டும்.

சுவாமிநாதன் (காவல்துறை உதவி ஆய்வாளர்): சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, அகலப்படுத்த வேண்டும். இக்கூட்டத்திற்கு நகர்மன்றத் தலைவர் சு.ப. தமிழழகன் தலைமை வகித்தார். ஆணையர் பூங்கொடி அருமைக்கண் வரவேற்றார்.

திருவிடைமருதூர் ஒன்றியக் குழுத் தலைவர் செ. ராமலிங்கம், நகர்மன்ற துணைத் தலைவர் தர்மபாலன், நகராட்சி அதிகாரிகள், ஓய்வு பெற்ற பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி, மின்வாரிய அதிகாரிகள், பி.எஸ்என்எல் அதிகாரிகள், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Last Updated on Wednesday, 17 March 2010 10:24
 


Page 134 of 167