தினமணி 09.03.2010
தார் சாலைகள் அமைக்கும் பணியை தாமதப்படுத்தும் ஒப்பந்ததாரர்களுக்கு நோட்டீஸ்
களக்காடு, மார்ச் 8: திருநெல்வேலி மாவட்டம், களக்காடு பேரூராட்சியில் நபார்டு திட்டத்தின் கீழ் தார் சாலை அமைக்க டெண்டர் விடப்பட்ட பின்னரும், பணியைத் தாமதப்படுத்தி வரும் ஒப்பந்ததாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்று திங்கள்கிழமை நடைபெற்ற பேரூராட்சிக் கூட்டத்தில் தலைவர் ச. முத்துகிருஷ்ணன் தெரிவித்தார்.
களக்காடு பேரூராட்சிக் கூட்டம் அதன் தலைவர் ச. முத்துகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் பி.சி. ராஜன், சுகாதார ஆய்வாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற பேரூராட்சிக் கூட்டத்தில் சிவபுரம், கீழப்பத்தை, மேலப்பத்தையிலிருந்து அம்பேத்கர் நகர் செல்லும் சாலை ஆகிய 3 தார் சாலைகளையும் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ. 56 லட்சத்தில் சீரமைக்க தீர்மானிக்கப்பட்டது. அதனையடுத்து டெண்டரும் விடப்பட்டது.
டெண்டர் விடப்பட்டு நீண்ட நாள்களாகியும் பணிகள் தொடங்கப்படவில்லை.
மேலும், களக்காடு புதிய பஸ் நிலையம் செல்லும் குடிதாங்கிகுளம் சாலை கற்கள் குவிக்கப்பட்டு 1 மாதம் ஆகியும் இதுவரை பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது.
சாலை முழுவதும் கற்கள் குவிந்துள்ளதால் அடிக்கடி விபத்துகளும், வாகனங்களில் பழுதும் ஏற்படுகிறது என்று பெரும்பாலான உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இதனையடுத்து, ஒரு வாரத்தில் பணிகளைத் தொடங்கவில்லை என்றால், சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்களின் டெண்டர் ரத்து செய்யப்படும் என்று நோட்டீஸ் அனுப்பப்படும் என்றார் பேரூராட்சித் தலைவர் ச. முத்துகிருஷ்ணன்.
இக்கூட்டத்தில், பேரூராட்சிக்கு நிரந்தர செயல் அலுவலரை நியமிக்க மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்த வேண்டும் என்றும் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.