தினமலர் 05.03.2010
பொள்ளாச்சியில் பழுதடைந்த ரோடுகள் சீரமைப்பதற்காக ரூ. 87 லட்சம் நிதி
பொள்ளாச்சி : பொள்ளாச்சியில் பழுதடைந்த ரோடுகளை புதுப்பிக்க 21 லட்சமும், குண்டும் குழியுமான ரோடுகளை சீரமைக்க 66.15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொள்ளாச்சியில் இரண்டு பஸ் ஸ்டாண்ட்களை இணைக்கும் சுரங்க நடைபாதை திட்ட பணிகள் நடப்பதாலும், கோட் டூர் ரோட்டில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணிகள் நடப்பதாலும் போக்குவரத்து வழித்தடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பொள்ளாச்சியில் ராஜாமில் ரோடு, மார்க்கெட் ரோடு, நகராட்சி அலுவலக ரோடு, உடுமலை ரோடு, கடைவீதிகளில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. நகராட்சி அலுவலகம் ரோடும், ராஜாமில் ரோடும் மிகவும் உருக்குலைந்து காட்டுப்பாதை போன்று மாறி விட்டதால் வாகன ஓட்டுனர்கள் சிரமப்படுகின்றனர். இந்த ரோட்டை புதுப்பிக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். எனவே, நகராட்சி அலுவலக ரோட்டை புதுப்பிக்க 11.20 லட்சமும், ராஜாமில் ரோட்டை புதுப்பிக்க 9.90 லட்சமும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ரோடுகளை புதுப்பிக்க 21 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை போல, ரோடுகளில் பேட்ஜ் ஒர்க் செய்து ஸ்பீடு பிரேக் அமைக்கவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சியில் குடிநீர் திட்ட பணிகளுக்காக மார்க்கெட் ரோடு, கடை வீதி, மகாலிங்கபுரம், வெங்கடேசா காலனி உள்ளி பகுதிகளில் ரோடுகள் தோண்டப் பட்டது. நகராட்சியில் உள்ள 36 வார்டுகளிலும் ரோடுகள் உருக்குலைந்து குண்டும் குழியுமாக உள்ளது. பழுதடைந்த 30 ரோடுகளில் பேஜ்ட் ஒர்க் மற்றும் ஸ்பீடு பிரேக் மைக்க மொத்தம் 66.15 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: ரோடுகளை புதுப்பிக்கவும், பேட்ஜ் ஒர்க் செய்யவும் மொத்தம் 87.15 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்க கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ரோடு போடும் பணிகள் விரைவில் துவங்கப்படும் என்றனர்.