தினமலர் 30.12.2009
மாநகராட்சியில் பல்வேறு இனங்களில் தொடர்கிறது வருவாய் 'கசிவு': 'ஓட்டை அடைக்கப்பட்ட' ரிங் ரோட்டில் வசூல் உயர்வுமதுரை: மதுரை மாநகராட்சியில் பல்வேறு இனங்களில் வருவாய் "கசிவு' (ரெவின்யூ லீக்கேஜ்) இன்னும் தொடர்கிறது. முறைகேடுகள் தடுக்கப்பட்டுள்ளதால் ரிங் ரோடு டோல்கேட்டுகளில் வருவாய் உயர்ந்துள்ளது.
நிதி நெருக்கடியில் மதுரை மாநகராட்சி சிக்கித் தவிப்பதற்கு சொத்து வரி நிலுவை, புதிய கட்டடங்களுக்கு சொத்து வரி நிர்ணயிக்கப்படாதது போன்ற காரணங்கள் கூறப்பட்டாலும், பல்வேறு இனங்களில் வருவாய் "கசிவு' உள்ளது. முதல் "கசிவாக' லஞ்ச ஒழிப்பு போலீசார் கண்டுபிடித்தது, ரிங் ரோடு, "டோல் கேட்' முறைகேடு. ரசீது தராமல் குறைவான பணத்தை பெற்றுக்கொண்டு, பல வாகனங்கள் டோல் கேட் வழியாக செல்ல அனுமதிக்கப்பட்டன. இதனால் ஓரு நாளைக்கு குறைந்தது ஒரு லட்சம் ரூபாய், மாநகராட்சிக்கு இழப்பு ஏற்பட்டது. லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனைக்குப் பிறகு குழுக்கள் அமைத்து அதிகாரிகளே நேரடியாக "டோல் கேட்'டுகளை கண்காணிக்கின்றனர். தற்போது "டோல் கேட்'டுகளில் வருவாய் அதிகரித்து உள்ளது. உதாரணமாக 26.12.2009 அன்று ஒரு நாள் மட்டும் 75 ஆயிரம் ரூபாய் வசூல் அதிகரித்துள்ளது. மற்ற நாட்களிலும் எவ்வளவு அதிகரித்துள்ளது என அதிகாரிகள் கணக்கிட்டு
வருகின்றனர்.
வெள்ளக்கல் "கசிவு': மாநகராட்சிக்கு சொந்தமான வெள்ளக்கல் கழிவு நீர் பண்ணையில் பெருமளவு முறைகேடுகள் நடப்பதாக கூறப்படுகிறது. ஆட்டோ, டிராக்டர், லாரிகளில், காண்ட்ராக்ட் அடிப்படையில் அள்ளப்படும் குப்பை, வெள்ளக் கல்லுக்கு கொண்டு வரப்பட்டு கொட்டப்படுகின்றன. அங்குள்ள எடைமேடையில் இவை எடை போடப்பட்டு, காண்ட்ராக்டர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படும். இவற்றையும் முன்னாள் ராணுவத்தினர் நலச்சங்கத்தை (டெக்ஸ்கோ) சேர்ந்தவர்கள் எடைபோட்டு, கணக்கு வைக்கின்றனர். குப்பை லாரிகளில் சில, ஓட்டப்படாமல் நிறுத்தப்பட்டு, ஓடியதாக கணக்கு காட்டப்பட்டு டீசல் பெறப்படுகிறது. எடையில் "அனுசரித்து போக,' மற்ற லாரிகளிடம், ஒரு டிரிப் புக்கு 50 ரூபாய், பெறப்படுகிறது. இந்த வகையில் ஒரு நாளைக்கு இரண்டாயிரம் ரூபாய் கை மாறுகிறது. ஓடாத லாரிகளுக்காக பெறப்படும் டீசல், வெளி மார்க்கெட்டில் விற்கப்படுகிறது.
இல்லாத பதவிக்கு சம்பளம்: மாநகராட்சிக்கு சொந்தமான நீச்சல்குளம், ராஜாஜி பூங்காவில் முன்பு "டெக்ஸ்கோ'வை சேர்ந்தவர்கள் பாதுகாப்பு பணியில் இருந்தனர். இவை இரண்டும், தனியார் பராமரிப்பில் விடப் பட்ட பிறகு, "டெக்ஸ்கோ'வை சேர்ந்தவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடவில்லை. இருப்பினும் இங்கு பணிபுரிவதாக மூன்று"டெக்ஸ்கோ' ஊழியர்களுக்கு தொடர்ந்து மாதம் 8396 ரூபாய் சம்பளம் தரப்படுகிறது. இது போல் ஆங்காங்கே பல "வருவாய் கசிவு'கள் உள்ளன. இந்த "ஓட்டைகளை' எல்லாம் அடைத்தால் தான் நிதி நிலைமையை சரி செய்ய முடியும். இல்லாவிட்டால், நிதி நிலையை காரணம் காட்டி வரி உயர்வு என, மக்கள் தலையில் தான் சுமையை ஏற்ற நேரிடும்.