தினமணி 03.12.2009
களக்காடு பேரூராட்சியில் நபார்டு திட்டத்தின்கீழ் ரூ. 56 லட்சத்தில் தார்சாலைகள்
களக்காடு, டிச. 2: களக்காடு பேரூராட்சியில் நபார்டு திட்டத்தின்கீழ் ரூ.56 லட்சத்தில் தார்சாலைகள் அமைக்க புதன்கிழமை நடைபெற்ற பேரூராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
களக்காடு பேரூராட்சியின் அவசரக் கூட்டம் அதன் தலைவர் ச. முத்துகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. செயல் அலுவலர் ராஜேந்திரன், பேரூராட்சித் துணைத்தலைவர் பி.சி. ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் சுகாதார ஆய்வாளர் முருகன் உள்பட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் களக்காடு பேரூராட்சிப் பகுதியில் நபார்டு திóட்டத்தின்கீழ் ரூ.56 லட்சத்தில் கீழப்பத்தை, மேலப்பத்தை, சிவபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தார் சாலைகள் அமைக்க தீர்மானிக்கப்பட்டது. உறுப்பினர் உமாநாத், நபார்டு திட்டத்தில் தனது வார்டு புறக்கணிக்கப்பட்டுள்ளது என்றார். தெருவிளக்கு, சாலைவசதி செய்து தரக் கோரி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். அனைத்து வார்டுகளிலும் படிப்படியாக வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார் பேரூராட்சித் தலைவர் ச. முத்துகிருஷ்ணன்.