தினமணி 2.12.2009
பழுதடைந்த சாலைகளை விரைந்து சீரமைக்க முடிவு
மயிலாடுதுறை, டிச. 1: மயிலாடுதுறையில் மழையால் பழுதடைந்த சாலைகளை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுப்பது என நகர வளர்ச்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அண்மையில் பெய்த பலத்த மழையின் காரணமாக, மயிலாடுதுறையில் உள்ள அனைத்து சாலைகளும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சாலைகளை சீரமைப்பது தொடர்பான நகர வளர்ச்சி கலந்தாய்வுக் கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் மயிலாடுதுறை எம்எல்ஏ எஸ். ராஜ்குமார் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நகர்மன்றத் தலைவர் ஜெ. லிங்கராஜன், துணைத் தலைவர் டி. சத்தியேந்திரன், நகராட்சி ஆணையர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மயிலாடுதுறையில் பழுதடைந்த சாலைகள் குறித்து நடைபெற்று வரும் கணக்கெடுப்புப் பணிக்கு அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மேலும், காந்திஜி சாலை (நெம்பர்-2 ரோடு) சிமெண்ட் சாலையாக மாற்றப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், இந்தச் சாலையின் இருபக்கங்களிலும் வடிகால் வசதி ஏற்படுத்துவதற்காக ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இதைத்தொடர்ந்து, ஒரு மாதத்துக்குள்ளாக போக்குவரத்து அதிகம் உள்ள சாலைகள் அனைத்தும் சீரமைக்கப்படும் என கூட்டத்தில் முடிவு மேற்கொள்ளப்பட்டது.
நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் முத்துசாமி, உதவிப் பொறியாளர் சுரேஷ்,மின்சார வாரியம் இளநிலை பொறியாளர் சீனிவாசன், பிஎஸ்என்எல் உதவிப் பொறியாளர் பிரதீப்குமார், காவல் உதவி ஆய்வாளர் ராஜசேகர், நகராட்சி பொறியாளர் ராஜா மற்றும் நகராட்சி அலுவலர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக,நகர வளர்ச்சிக் கூட்டத்தில் தமிழ்நாடு நகரச் சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ்
மயிலாடுதுறையில் நகராட்சி சாலைகளை சீர்படுத்தப்படுவதற்கான முறைகள் குறும்படங்கள் மூலம் விளக்கப்பட்டது.