தினபூமி 04.07.2013
சாலைகளை புதிப்பிக்க ரூ.410 கோடி ஒதுக்கீடு: முதல்வர் உத்தரவு
சென்னை, ஜூலை.4 -
திருச்சி - ஸ்ரீரங்கம் பாலத்தை புதுப்பித்து 4 வழியாக மாற்றியமைக்கவும்,
அரியலூர் - பெரம்பலூர் மாவட்ட சாலைகளை புதுப்பிப்பது உட்பட பல்வேறு சாலை
பணிகளுக்காக ரூ.410.7 கோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா நிர்வாக ஒப்புதல்
வழங்கி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள
செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சாலைகள் அனைத்து மக்களையும் இணைத்து தேசிய ஒருமைப்பாட்டை
ஏற்படுத்துகிறது என்று சொன்னால் அது மிகையாகாது. ஒரு மாநிலத்தின் பொருளாதார
வளர்ச்சி மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர, சாலை கட்டமைப்பு மேம்பாடு
வழி வகுக்கிறது. மாநிலத்தில் உள்ள கிராமப்புற மக்களின் பொருளாதார
வளர்ச்சிக்கு சிறந்த சாலைக் கட்டமைப்பு வசதிகள் பெரிதும் துணைபுரிகின்றன.
கிராமங்களையும் நகரங்களையும் இணைப்பது, பயண நேரம், வாகன இயக்கச் செலவு
ஆகியவற்றை குறைப்பது போன்ற நோக்கங்களுடன், ஒருங்கிணைந்த சாலைக்
கட்டமைப்பினை ஏற்படுத்தி, தமிழகத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சியை
மேம்படுத்தும் வகையில், முதலமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையிலான அரசு
செயல்பட்டு வருகிறது.
அந்த வகையில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், சென்னை - திருச்சி -
திண்டுக்கல் சாலையில், திருச்சி மாநகரத்திற்கும் ஸ்ரீரங்கத்திற்கும்
இணைப்பாக 1927-ஆம் ஆண்டு கட்டப்பட்ட பாலம் மிகவும் பழுதடைந்துள்ளதால்,
கனரக வாகனப் போக்குவரத்து இப்பாலத்தில் தற்பொழுது அனுமதிக்கப்படுவது இல்லை.
இதன் காரணமாக திருச்சியிலிருந்து ஸ்ரீரங்கம் சென்றடைவதிலும்,
ஸ்ரீரங்கத்திலிருந்து திருச்சி சென்றடைவதிலும் காலதாமதம் ஏற்படுகின்றது.
இதன் தெடர்ச்சியாக, ஏனைய பகுதிகளில் வாகன நெரிசல் அதிக அளவு ஏற்படுகிறது.
இதனைக் கருத்தில் கொண்டு, சென்னை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில்
திருச்சியையும் ஸ்ரீரங்கத்தையும் இணைக்கும் பழுந்தடைந்துள்ள இரும்புப்
பாலத்தினை மாற்றியமைத்து புதியதாக நான்கு வழி பாலம், அணுகு சாலையில்
அய்யன் வாய்க்கால் குறுக்கே ஒரு சிறு பாலம் மற்றும் சாலை சந்திப்பில்
மேம்பாட்டுப் பணிகள் ஆகியவற்றை 81 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ள,
தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா நிர்வாக அனுமதி அளித்து
உத்தரவிட்டுள்ளார்.
கோடைவாசஸ்தலமாக விளங்கும் கொடைக்கானலில் சாலைக் கட்டமைப்பு வசதிகளை
மேம்படுத்த வேண்டியது மிகவும் அவசியம் என்பதைக் கருத்தில் கொண்டு,
கொடைக்கானலில் 17 கி.மீ நீள சாலைத் தொடர்களை இடைவழித் தடத்திலிருந்து
இருவழித்தடமாக அகலப்படுத்துதல், சிறு பாலங்கள் கட்டுதல், சாலையை ஒட்டி
தாங்கும் சுவர் கட்டுதல் போன்ற பணிகளை 18 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில்
மேற்கொள்ள தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நிர்வாக அனுமதி அளித்து
உத்தரவிட்டுள்ளார்.
கும்பகோணம் நகரை எளிதில் அடைவதற்கு மிகவும் உதவிகரமாக உள்ள
விக்கிரவாண்டி - கும்பகோணம் - தஞ்சாவூர் சாலையில், காவேரி ஆற்றின் குறுக்கே
பாலக்கரையில் அமைந்துள்ள பாலம் பழுதடைந்துள்ளதால், இப்பாலத்தில்
தற்பொழுது போக்குவரத்து தடை செய்யப்பட்டு மற்றொரு பாலம் வழியாக சுற்றி
விடப்படுகிறது. இதனால் காலவிரயமும், எரிபொருள் விரயமும் ஏற்படுகிறது. எனவே
இந்த பாலத்தினை
5 கோடி ரூபாய் செலவில் புதுப்பித்து மீண்டும் கட்டுவதற்கான நிர்வாக ஒப்புதலை முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
சேலம் மாநகரில் நிலவும் போக்குவரத்து நெரிசல்களைத் தவிர்க்கும் வகையில்
சேலம் நகரிலுள்ள ஐந்து ரோடு சாலை சந்திப்பு மற்றும் குரங்குச் சாவடி
சந்திப்பு ஆகிய இடங்களில் சாலை மேம்பாலங்கள் கட்டுவதற்கு உத்தரவிட்டுள்ள
தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா, இச்சாலை மேம்பாலங்கள் அமைப்பதற்காக
விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிக்கு 1 கோடியே
8 லட்சம் ரூபாய் நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளார்.
அரியலூர் மற்றும் பெரம்பலூர் சுண்ணாம்பு சுரங்கம் மற்றும் சிமெண்ட்
ஆலைகள் அதிகம் உள்ள மாவட்டங்களாகும். இத்தொழிற்சாலைகளுக்கு செல்லும் கனரக
வாகனங்களால், இங்குள்ள சாலைகள் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளன. எனவே
பழுதடைந்த சாலைகள் அனைத்தும் கனரக வாகனங்கள் செல்லும் வகையில்
புதுப்பிக்கப்பட வேண்டும் என தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா
உத்தரவிட்டுள்ளார். இதன்படி அரியலூர் மாவட்டத்திலுள்ள பழுதடைந்துள்ள 42
கி.மீ நீளமுள்ள சாலைகளை 86 கோடியே 45 லட்சம் ரூபாய் செலவிலும், பெரம்பலூர்
மாவட்டத்தில் பழுதடைந்துள்ள 36.80 கி.மீ சாலைகளை 65 கோடியே 92 லட்சம்
ரூபாய் செலவிலும் சீரமைத்திட, அதாவது மொத்தம் 152 கோடியே 37 லட்சம்
ரூபாய் செலவில் 78.80 கி.மீ நீளமுள்ள சாலைகளை சீரமைக்க தமிழ்நாடு
முதலமைச்சர் ஜெயலலிதா நிர்வாக ஒப்புதல் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
அரசின் இந்த நடவடிக்கைகள், வாகன நெரிசல் இன்றி குறைந்த நேரத்தில், பொதுமக்கள் தாங்கள் விரும்பிய இடத்தைச் சென்றடைய வழிவகுக்கும்.