தினத்தந்தி 23.03.2013
புழுதிவாக்கத்தில் பள்ளி மாணவர்களின் கோரிக்கையை ஏற்று ரூ.28 லட்சத்தில் தார் சாலை மாநகராட்சி நடவடிக்கை
சென்னை மாநகராட்சி பெருங்குடி 14–வது மண்டலத்தில் உள்ள புழுதிவாக்கம் 168–வது வட்டம் கண்ணகி தெருவில் பள்ளி கூடங்கள் உள்ளன. இங்கு சுமார் 2000–க்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாதாள சாக்கடை திட்டப்பணிக்காக இந்த பகுதியில் பள்ளம் தோண்டப்பட்டு, மூடப்பட்டன.
இதனால் இந்த சாலைகள் குண்டும் குழியுமாக மாறியது. மழை காலங்களில் சேறும், சகதியுமாக இருந்ததால் மாணவர்கள் பள்ளி கூடத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதை கண்டித்து பள்ளி மாணவ–மாணவிகள் போராட்டம் நடத்தினார்கள். மேலும் குண்டும், குழியுமான அந்த சாலையை சீரமைத்து தரவேண்டும் என மாநகராட்சி மேயருக்கு மாணவ–மாணவிகள் கோரிக்கை விடுத்து இருந்தனர்.