தின மணி 23.02.2013
போக்குவரத்து அபிவிருத்திக்காக கட்டாய நில ஆர்ஜிதம்
கோவை கிழக்கு மண்டலத்துக்கு உள்பட்ட 37-வது வார்டு பகுதியில் போக்குவரத்து அபிவிருத்திக்காக சுமார் 36 சென்ட் நிலத்தை கட்டாய ஆர்ஜிதம் செய்ய மாநகராட்சி அவசரக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த வார்டில் தண்ணீர் பந்தல் சாலை, விளாங்குறிச்சி சாலை, கொடிசியா சாலை மற்றும் காந்தி மாநகர் சந்திப்பில் அபாய வளைவுப் பகுதியில் அமைந்துள்ள பழைய குடியிருப்புகளை (36 சென்ட் நிலம்), போக்குவரத்து அபிவிருத்திக்காக கட்டாய நில ஆர்ஜிதம் செய்ய வேண்டியுள்ளது. இதற்கான இழப்பீட்டுத் தொகை விவரம் அரசு வழிகாட்டுதல்படி தயாரிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 14 பேரின் நிலங்களை உள்ளூர் திட்டக் குழுமத்தின் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியில் இருந்து பெற்று அபிவிருத்தி செய்வது தொடர்பாக வெள்ளிக்கிழமை நடந்த மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மாற்று இடம்: எஸ்.ஐ.எச்.எஸ். காலனியில் நீண்ட காலமாக மழை நீர் செல்லும் பள்ளத்தில் ஆக்கிரமிப்பில் உள்ள 3 பேருக்கு மாற்று ஏற்பாடாக அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒதுக்கீடு வழங்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் பகுதியில் திருவள்ளுவர் நகர், சாமா நாயுடு வீதி சாலையை இணைக்கும் வகையில் தனியார் நிலம் சுமார் 4400 அடி ஆர்ஜிதம் செய்யப்பட உள்ளது. இதற்காக சுமார் ரூ.2 கோடியை உள்ளூர் திட்டக் குழும உள்கட்டமைப்பு அபிவிருத்தி நிதியில் இருந்து பெறுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சி எல்லைக்கு உள்பட்ட அவிநாசி சாலையில் விமான நிலையத்துக்குள் நுழையும் சாலையில் மாவட்ட வருவாய்த் துறைக்குச் சொந்தமான புறம்போக்கு 21.50 சென்ட் பரப்பளவு, சி.எஸ்.ஐ. திருச்சபையின் அனுபவத்தில் உள்ளது. மேலும் 12.50 சென்ட் பரப்பளவு தனியாரிடம் உள்ளது.
தனியாரிடம் இருந்து நில ஆர்ஜிதம் செய்தும் புறம்போக்கு நிலத்தை மாவட்ட வருவாய்த் துறையிடம் இருந்து நில உரிமை மாற்றம் பெற்றும் போக்குவரத்துத் தீவு அமைக்கக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வழக்குரைஞர் நீக்கம்: கோவை மாநகராட்சியின் உயர் நீதிமன்ற வழக்குரைஞர் சிவக்குமார் மீது பெறப்பட்ட புகார் கடிதத்தின் அடிப்படையில் அவரை நீக்கத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இது தவிர, காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிட முயற்சி எடுத்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாராட்டுத் தெரிவித்தும், அவருடைய 65-வது பிறந்த நாளுக்கு வாழ்த்துத் தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மொத்தம் 15 தீர்மானங்களும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.