தினமணி 05.05.2010
துவக்க, மழலையர் பள்ளிகளில் சேர்க்கைக்கு பிறப்புச்சான்று மட்டும் போதும்: ஆட்சியர்
திருப்பூர், மே 4: துவக்க மற்றும் மழலையர் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்க பிறந்ததேதிக்கான சான்று இருந்தாலே போதும் என்று, அனைத்து பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
பள்ளி அங்கீகாரம், மாணவர் சேர்க்கை, இலவச நலத்திட்டங்கள் செயல்படுóத்துதல் உள்ளிóட்டவை குறித்த ஆய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் சி.சமயமூர்த்தி தலைமையில் திருப்பூரில் செவ்வாய்க்கிழமை நடந்தது.
மாவட்ட வருவாய் அலுவலர் கே.வி.முரளிதரன், முதன்மை கல்வி அலுவலர் டி.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் ஆட்சியர் சி.சமயமூர்த்தி பேசியதாவது:
திருப்பூர் மாவட்டத்தில் 130 மேல்நிலைப் பள்ளிகள், 125 உயர்நிலைப் பள்ளிகள், 322 நடுநிலைப் பள்ளிகள், 1,097 துவக்க மற்றும் மழலையர் பள்ளிகள் என மொத்தம் 1,682 பள்ளிகள் அங்கீகாரம் பெற்றுச் செயல்படுகின்றன.
அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் ஆய்வு அலுவலர்கள் மூலம் பார்வையிட்டு அங்கீகாரம் கோரும் கருத்துருக்கள் அனுப்ப அறிவுறுத்தப்படும். குறிப்பிட்ட காலத்துக்குள் கருத்துரு சமர்ப்பிக்காத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
துவக்க மற்றும் மழலையர் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையின் போது பிறந்த தேதிக்கான சான்று தவிர வேறு சான்றுகள் கேட்கக் கூடாது. பிற வகுப்புகளில் மாணவர்களின் பதிவுச்சான்று அல்லது மாற்றுச்சான்று அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்படலாம்.
இலங்கை அகதிகளின் குழந்தைகள், சுனாமியால் பாதிக்கப்பட்டோர் மற்றும் குழந்தைத் தொழிலாளாராகக் கண்டறியப்பட்ட குழந்தைகளுக்கு பதிவுச்சான்று, மாற்றுச்சான்று உள்ளிóட்ட ஆவணங்களை கட்டாயப்படுத்தாமல் பள்ளிகளில் சேர்க்கை வழங்க வேண்டும்.
அனைத்து பள்ளிகளிலும் அரசு நிர்ணயித்த கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது கண்டறியப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
2 முதல் 5-ம் வகுப்புகளுக்கும், 7 முதல் 12-ம் வகுப்புகளுக்கும் இலவச பாடநூல் அனுப்பட்டு வருகிறது. அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 798 பள்ளிகளுக்கு 291.58 டன் புத்தகங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
இப்பாடப்புத்தகங்கள் பள்ளி துவங்கப்படும் நாளிலேயே மாணவர்களுக்கு வழங்கப்படும். மேலும் 1 மற்றும் 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு சமச்சீர் கல்வி திட்டத்தின் புத்தகங்களும் வழங்கப்படும்.
பள்ளி வாகனங்கள் மஞ்சள் நிறமுடையதாகவும், முன்னும் பின்னும் பள்ளி வாகனம் என குறிப்பிட்டிருக்கவும் வேண்டும். அவ்வாகன ஓட்டுநர்களாக, கனரக வாகனங்களில் 5 ஆண்டு முன்னனுபவம் பெற்றவர்களையே நியமிக்க வேண்டும், என்றார்.
வருவாய் கோட்டாட்சியர்கள் சையது ஹுமாயூன் (திருப்பூர்), சோமசேகர் (உடுமலை), அலிஅக்பர் (தாராபுரம்), வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பாட்டப்பன் (திருப்பூர் தெற்கு), ரஜினிகாந்த் (திருப்பூர் வடக்கு) உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.