தினமலர் 14.05.2010
மக்கள்தொகை கணக்கெடுப்பால் ஆசிரியர்கள் புதிய இடத்தில் ஆக. 2ல் பணி ஏற்க உத்தரவு
விருதுநகர் : மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், கவுன்சிலிங்கில் இடமாறுதல் பெற்றால், ஜூலை 31ல் பழைய இடத்திலிருந்து விடுவிக்கப்பட்டு, ஆக.,2 ல் புதிய இடத்தில் பணி ஏற்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அரசு, நகராட்சி, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் பொது மாறுதலுக்கான கவுன்சிலிங், மே 18ல், 19லும், தலைமையாசிரியர்களுக்கு மே 18ல் நடக்க உள்ளது.
கவுன்சிலிங் நடத்துவதற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் தலைமை வகிப்பர். உயர்நிலை, மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியர் இரண்டு பேர், கண்காணிப்பாளர், உதவியாளர், இளநிலை உதவியாளர், டைப்பிஸ்ட், அலுவலக உதவியாளர் என ஏழு பேர் அடங்கிய குழு அமைத்து கவுன்சிலிங் நடத்த வேண்டும்.
கவுன்சிலிங்கில் இடமாறுதல் பெறும் ஆசிரியர்கள், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் இருந்தால், பழைய இடத்தில் ஜூலை 30 வரை பணி செய்ய வேண்டும். ஜூலை 31ல் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு, ஆக., 2ல் மாறுதல் பெற்ற இடத்தில் பணி ஏற்க வேண்டும். ஆக. 2 ல் பணி ஏற்றாலும் அவர் அந்த கல்வியாண்டில் முழுமையாக பணியாற்றியவராக கருதப்பட்டு அடுத்த கவுன்சிலிங்கில் பொது மாறுதல் பெற தகுதியுடையவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கவுன்சிலிங் நடத்தும் இடத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க தேவையான போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளை முதன்மை கல்வி அதிகாரிகள் செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வி செயலாளர் குற்றாலலிங்கம் உத்தரவிட்டுள்ளார்.