தினமணி 14.05.2010
கோவை மாநகராட்சி பள்ளியில் மாலைநேர கல்வி மையம் திறப்பு
கோவை, மே 13: கோவை} மேட்டுப்பாளையம் சாலை, மாநகராட்சி கென்வின் நடுநிலைப் பள்ளியில் மாலைநேர கல்வி மையம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.
இம்மையத்தை மேயர் ஆர்.வெங்கடாசலம் திறந்துவைத்தார். நிகழ்ச்சிக்கு மாநகராட்சி ஆணையர் அன்சுல் மிஸ்ரா, துணை மேயர் நா.கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
49}வது வார்டுக்கு உட்பட்ட காமராஜபுரம் பகுதியில் உள்ள இப்பள்ளியில் அனைத்து வசதிகளுடன் கூடிய மாலை நேர கல்வி மையம் அமைக்கப்பட்டுள்ளது. வீட்டில் இரவு நேரங்களில் படிக்க முடியாத ஏழை மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் பள்ளி முடிந்ததும் இம் மையங்களில் படிக்கலாம்.
இம்மையங்கள் மாலை 6 முதல் இரவு 8.30 மணி வரை செயல்படும். இம்மையத்தில் ஒவ்வொரு மாணவரும் தனித்தனியாக அமர்ந்து படிக்கும் வகையில் வட்ட மேசையுடன் கூடிய நாற்காலிகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, மின்விசிறி, மின்சிக்கன விளக்குகள், கழிப்பிட வசதி மற்றும் இதர வசதிகளுடன் ரூ. 3.60 லட்சம் செலவில் இந்த மையம் உருவாக்கப்பட்டுள்ளது.
பிற மண்டலங்களில் உள்ள பள்ளிகளிலும் இதுபோன்ற மையங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இம்மையங்களை கண்காணிக்க தனிநபர்கள் மாநகராட்சி மூலம் நியமிக்கப்பட உள்ளனர். இந்நிகழ்ச்சியில் கல்விக்குழுத் தலைவர் ஆர்.கல்யாணசுந்தரம், 35}வது வார்டு கவுன்சிலர் முருகேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.