தினமணி 18.05.2010
ஆசிரியர்களுக்கு பணிமாறுதல் கலந்தாய்வு
ராமநாதபுரம்,மே 17: தொடக்கக் கல்வித்துறையின்கீழ் செயல்படும் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான 2010 ஆம் ஆண்டுக்குரிய பொது மாறுதல் மற்றும் கலந்தாய்வு வரும் மே 20 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
இதுதொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பெ.பூலோக சுந்தரவிஜயன் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இந்த ஆண்டுக்குரிய பொதுமாறுதல் மற்றும் கலந்தாய்வு இணையதளம் மூலமாக ராமநாதபுரம் வட்டார வள மையத்தில் நடைபெறவுள்ளது.
மே 20-ம் தேதி முற்பகலில் நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மாறுதல் மற்றும் பதவி உயர்வு, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப் பள்ளிகளில் 6,7,8 வகுப்புகளில் பணிபுரிந்து உயர்நிலைப் பள்ளிக்கு ஈர்த்துக் கொள்ளப்படாத பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாறுதல். அன்று பிற்பகல் பட்டதாரி,தமிழ் ஆசிரியர்கள் ஒன்றியத்திற்குள் மாறுதல் மற்றும் பதவிஉயர்வு.
மே 21-ம் தேதி முற்பகலில் தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மாறுதல் மற்றும் பதவிஉயர்வு.
அன்று பிற்பகல் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்ந்த நடுநிலைப் பள்ளிகளில் 6,7,8-ம் வகுப்புகளில் பணிபுரிந்து உயர்நிலைப் பள்ளிக்கு ஈர்த்துக் கொள்ளப்படாத இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் அந்த ஒன்றியத்தில் உபரி இடைநிலை ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வும் நடைபெறும்.
மே 24 ஆம் தேதி முற்பகல் இடைநிலை ஆசிரியர்கள் ஒன்றியத்திற்குள் மாறுதலும் பிற்பகல் இடைநிலை ஆசிரியர்கள் ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல்.
மே 25 ஆம் தேதி இடைநிலை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலும் அன்று பிற்பகல் பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலும் அந்தந்த மாவட்ட கலந்தாய்வு மையங்களில் நடைபெறும்.
இக் கலந்தாய்வு ராமநாதபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகில் உள்ள வட்டார வள மையத்தில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.
எனவே மாறுதல் கோருதல் மற்றும் பதவி உயர்வு பெற இருக்கும் ஆசிரியர்கள் உரிய அத் தாட்சியுடன் கலந்தாய்வு நடைபெறும் மையத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக தவறாமல் வருகை தருமாறும் தவிர்க்க முடியாத காரணங்களால் கலந்தாய்வுக்கு வர இயலாத ஆசிரியர்கள் அவர்கள் சார்பாக உரிய படிவத்தில் அமைந்த கடிதம் அளித்து ஒரு நபரை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.