தினமணி 20.05.2010
ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு:132 பேருக்கு ஆணை
திருச்சி, மே 19: திருச்சியில் புதன்கிழமை நடைபெற்ற மாவட்டம்விட்டு மாவட்டம் மாறுதல் கோரும் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நிகழ்ச்சியில் 132 பேருக்கு பணியிட மாறுதல் ஆணை வழங்கப்பட்டது.
திருச்சியில் அரசு, நகராட்சி, மாநகராட்சி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், தமிழாசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள், உடல் கல்வி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் ஆகியோருக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.மாவட்டத்துக்குள் மாறுதல் கோரிய ஆசிரியர்களில் 142 பேருக்கு செவ்வாய்க்கிழமை ஆணைகள் வழங்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து, மாவட்டம்விட்டு மாவட்டம் மாறுதல் கோரிய ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
முதன்மைக் கல்வி அலுவலர் கி. சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முதுநிலை ஆசிரியர்கள் 162 பேரும், பட்டதாரி ஆசிரியர்கள் 337 பேரும், இடைநிலை ஆசிரியர்கள் 26 பேரும், உடல் கல்வி ஆசிரியர்கள் 19 பேரும், ஓவிய ஆசிரியர்கள் 7 பேரும், ஆசிரியர் பயிற்றுநர்கள் உள்பட மொத்தம் ஏறத்தாழ 600 பேர் கலந்து கொண்டனர்.இவர்களில் 35 முதுநிலை ஆசிரியர்களுக்கும், 51 பட்டதாரி ஆசிரியர்களுக்கும், 6 இடைநிலை ஆசிரியர்களுக்கும், 14 தமிழாசிரியர்களுக்கும், 3 உடல் கல்வி ஆசிரியர்களுக்கும், 2 ஓவிய ஆசியர்களுக்கும், 21 ஆசிரியர் பயிற்றுநர்களுக்கும் என மொத்தம் 132 பேருக்கு இட மாறுதல் ஆணை வழங்கப்பட்டது.