தினகரன் 27.05.2010
எஸ்.எஸ்.எல்.சி.தேர்வில் மாநகராட்சி பள்ளி முதலிடம்: மாணவிக்கு மேயர் பாராட்டு
திருநெல்வேலி: எஸ்.எஸ்.எல்.சி.தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்த மாணவியை மேயர் பாராட்டினார்.
எஸ்.எஸ்.எல்.சி.தேர்வில் நெல்லை டவுன் கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஜாஸ்மின் 495 மார்க் பெற்று மாநில அளவில் முதலிடத்தை பிடித்தார். தனியார் பள்ளிகளை மிஞ்சும் விதமாக மாநகராட்சி பள்ளி மாணவி மாநில அளவில் முதலிடம் பிடித்தது மாநகராட்சி வட்டாரத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து சாதனை படைத்த மாணவி ஜாஸ்மினை பாராட்டி மேயர் ஏ.எல்.சுப்பிரமணியன் கேடயம் வழங்கி பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். கமிஷனர் சுப்பையனும் மாணவியை கவுரவித்தார். துணைமேயர் முத்துராமலிங்கம் மாணவிக்கு கேடயம் வழங்கினார்.
மாநில அளவில் மூன்றாமிடம் பிடித்த பாளை., சாராள்தக்கர் பள்ளி மாணவி ஜெயலினையும், மாவட்ட அளவில் மூன்றாமிடம் பெற்ற டவுன் கல்லணை மாநகராட்சி பள்ளி மாணவி ஸ்ரீதேவி லெட்சுமியையும் மேயர் பாராட்டினார். மாநகராட்சி கவுன்சிலர்கள் ப.ரா.வெங்கடேசன், நமச்சிவாயம் (எ) கோபி ஆகியோர் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவியை பாராட்டி பரிசு வழங்கினர். இதில் முதன்மை கல்வி அதிகாரி மேரிஜெசிரோச், மாவட்ட கல்வி அதிகாரிகள் கோலப்பபிள்ளை, பரிமளம், மாநகராட்சி உதவிக்கமிஷனர் பாஸ்கர், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ரோலக்ஸ் பாலன் உட்பட பலர் கலந்து கொண்டனர