தினகரன் 02.06.2010
சமச்சீர் பாடப்புத்தகம் விநியோகம் அரசு, மாநகராட்சி பள்ளியில் மாணவர்கள் சேர ஆர்வம்
கோவை,ஜூன்.2: கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. பள்ளி திறந்த முதல் நாளே புத்தகங்கள் வழங்கப்பட்டதால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கோடை விடுமுறைக்கு பிறகு கோவை மாவட்டத்தில் உள்ள அரசு துவக்க பள்ளிகள், அரசு நடுநி¬லைப்பள்ளிகள், அரசு உயர் நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், மாநகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் முதல் நாளான நேற்று மாணவர் சேர்க்கை நடந்தது. அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் 1 மற்றும் 6 ம் வகுப்பிற்கு மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக நடந்தது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை காலையிலேயே அழைத்து சென்று பள்ளியில் சேர்த்தனர். மாநகராட்சி பள்ளிகளில் கடந்தாண்டை விட இந்தாண்டு மாணவர்கள் சேர அதிக ஆர்வம் காட்டியதாக பள்ளி தலைமை ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின் போது, தங்கள் பள்ளியில் உள்ள அடிப்படை வசதிகள், மற்றும் அரசின் சலுகைகள் குறித்து பெற்றோருக்கு தலைமை ஆசிரியர்கள் எடுத்து கூறினர்.
பள்ளி திறந்த முதல் நாளே அனைத்து மாணவர்களுக்கும் இலவச பாடபுத்தகம் வழங்கப்பட்டன. இந்தாண்டு 1 மற்றும் 6ம் வகுப்பிற்கு சமச்சீர் கல்வி முறை பின்பற்றப்படுகிறது. கோவை மாவட்டத்தில் முதலாம் வகுப்பிற்கு சென்று ள்ள 32 ஆயிரத்து 148 மாணவர்களுக்கும், 6ம் வகுப்பிற்கு சென்றுள்ள 17 ஆயிரத்து 223 மாணவர்களுக்கும் சமச்சீர் பாடப்புத்தகம் வழங்கப்பட்டன. கண்ணை கவரும் வகையில் வண்ணமயமாக புத்தகம் தயாரிக்கப்பட்டு இருந்தன. இப்புத்தகத்தை வாங்கி பார்த்த 1 மற்றும் 6 ம் வகுப்பு மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.