தினகரன் 09.06.2010
நகராட்சி பள்ளியில் மாணவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி
திருவள்ளூர், ஜூன் 9: திருவள்ளூர் சத்தியமூர்த்தி தெருவில் உள்ள நகராட்சி உயர் நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஸ்டீபன் சற்குணர் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் ரகுபதி முன்னிலை வகித்தார். ஆசிரியர் செந்தில்குமார் வரவேற்றார்.
நிகழ்ச்சியில், சமச்சீர் கல்வி திட்டம் தொடங்கிய இந்த ஆண்டு 6ம் வகுப்பு கணித புத்தகத்தை எழுதிய இப்பள்ளியின் ஆசிரியர் திருலோகசந்திரனை பாராட்டி, முன்னாள் நகராட்சி கவுன்சிலர் பாஸ்கரன் நினைவு பரிசு வழங்கினார்.
204 நாட்களில் 203 நாட்கள் பள்ளிக்கு வருகை தந்த மாணவி சம்சத் பானுவை பாராட்டி, கவுன்சிலர் தீபா பாஸ்கரன் பரிசு வழங்கினார். தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பாலகிருஷ்ணன், ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். ஆசிரியர் சுப்பிரமணி நன்றி கூறினார்.