தினமணி 17.06.2010
நஞ்சப்பா மாநகராட்சி பள்ளிக்கு மேஜைகள் வழங்கி உதவி
திருப்பூர், ஜூன் 16: திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி பள்ளிக்கு ரூ. ஒரு லட்சம் மதிப்பில் மேஜை, நாற்காலிகள் நடைபயிற்சியாளர் நலச்சங்கம் சார்பில் வழங்கப்பட்டுள்ளது.
நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் பள்ளிக்கு நிலம் வழங்கிய நஞ்சப்ப செட்டியாரின் 75-வது ஆண்டு விழா, அவரது குடும்பத்தினரை கௌரவித்தல், அப் பள்ளியில் 6 முதல் பிளஸ் 2 வரை படித்து முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குதல் உள்ளிட்ட விழாக்கள் புதன்கிழமை நடைபெற்றது.
நடைபயிற்சியாளர்கள் நலச்சங்கம் சார்பில் நஞ்சப்பா பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவுக்கு வளம் அமைப்பு தலைவர் கிருஷ்ணசாமி, கபடி மற்றும் கல்வி அறக் கட்டளை தலைவர் சக்தி பிலிம்ஸ் சுப்பிரமணியம் ஆகியோர் தலைமை தாங்கினர்.
சங்க உறுப்பினர்கள் சௌந்தரராஜன், சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமையாசிரியர் துரைச்சாமி வரவேற்றார். மேயர் க.செல்வராஜ் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
விழாவில், நஞ்சப்ப செட்டியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப் பட்டது. அவரது குடும்பத்தினர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர். தொடர்ந்து, அப் பள்ளியில் 6 முதல் பிளஸ் 2 வரை ஒவ்வொரு வகுப்பிலும் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தலா ரூ. 2 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்பட்ட து. மேலும், ரூ. ஒரு லட்சம் மதிப்பில் பள்ளிக்கு மேஜை, நாற்காலிகளும் தானமாக வழங்கப்பட்டன. சங்க நிர்வாகி லீலா நன்றி கூறினார்.