தினமணி 18.06.2010
ஒசூர் நகரில் உள்ள ஊராட்சிப் பள்ளிகளை நகராட்சிப் பள்ளிகளாக மாற்ற வலியுறுத்தல்
ஒசூர், ஜூன் 17: ஒசூர் நகரில் உள்ள 4 ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளை நகராட்சிப் பள்ளிகளாக மாற்றம் செய்ய வேண்டும் என நகர திமுக செயலர் வீ.விஜயகுமார் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் மாவட்ட ஆட்சியர் அருண்ராயிடம் வியாழக்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பது:
ஒசூர் நகரில் உள்ள 7 ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளை நகராட்சிப் பள்ளிகளாக மாற்ற மாவட்ட நிர்வாகம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து, இவை நகராட்சியின் கட்டுப்பாட்டில் மேம்பாட்டுப் பணிகள் மற்றும் பராமரிப்பு பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
அதேபோல, ராம் நகர் உருது நடுநிலைப் பள்ளி, ஜே.ஜே. நகர் தமிழ் துவக்கப் பள்ளி, பாரதிதாசன் தமிழ் துவக்கப் பள்ளி, தின்னூர் தெலுங்கு துவக்கப் பள்ளி ஆகியன வாடகைக் கட்டடத்தில் இயங்கி வருகின்றன.
இங்கு போதிய வசதிகள் இல்லாததால், மாணவர்கள் கல்வி பயிலும் சூழ்நிலை இல்லை. மேலும் இந்த 4 பள்ளிகளில் போதிய கழிவறை, குடிநீர் வசதிகள் இன்றி மாணவர்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
எனவே இந்த 4 ஒசூர் ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளை நகராட்சிப் பள்ளிகளாக மாற்றம் செய்ய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.