தினமலர் 08.10.2010
மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு உதவி
பெரம்பூர் : மாநகராட்சி பள்ளிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு, இலவச சீருடை மற்றும் புத்தக பைகள் வழங்கப்பட்டன.பெரம்பூரில் உள்ள ஸ்ரீ அய்யப்பா டிரஸ்ட் சார்பில், ஆண்டுதோறும் ஏழை, எளிய பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக சீருடை மற்றும் புத்தக பைகள் வழங்கி வருகின்றனர். 12 ஆண்டுகளுக்கு முன், 50 மாணவர்களுக்கு உதவி செய்த இந்த டிரஸ்ட், தற்போது 500 மாணவர்களுக்கு மேல் உதவும் அளவிற்கு வளர்ந்துள்ளது.இந்தாண்டு மாணவர்களுக்கு உதவி வழங்கும் நிகழ்ச்சி, நேற்று பெரம்பூரில் நடந்தது. நான்கு மாநகராட்சி பள்ளிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சீருடை, புத்தக பை, பென்சில், பேனா ஆகியவை வழங்கினர்; அதன் மொத்த மதிப்பு நான்கு லட்சம் ரூபாய்.ஸ்ரீ அய்யப்பா டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் மணி, மாணவர்களுக்கு சீருடைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.