தினமணி 08.10.2010
மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி
கோவை, அக். 7: கோவை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் 5 ஆயிரம் மாணவர்களுக்கு உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்புப் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சி சார்பில் ரூ. 20 லட்சம் செலவில் உயர்கல்வி மையம் ஆகஸ்ட் மாதம் அமைக்கப்பட்டது. மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியருக்கு உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி வழங்க கோவை அரசு கலைக் கல்லூரி குடிமைப்பணி பயிற்சி மையத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இதன்படி மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் 5 ஆயிரம் மாணவர்களுக்கு உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. முதல் பயிற்சி முகாம் செப். 29ம் தேதி நடந்தது. இதில் மாநகர காவல் ஆணையர் சைலேந்திபாபு பங்கேற்றார். இரண்டாம் நிகழ்வு வரும் சனிக்கிழமை(அக்.9) நடக்கிறது.
இனி வாரம் தோறும் சனிக்கிழமைகளில் 100 மாணவர்கள் வீதம் சிறப்புப் பயிற்சி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக பிளஸ் 2 மாணவர்களுக்கும், அடுத்த கட்டமாக பிளஸ் 1 மாணவர்களுக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது.
மேல்நிலை படிப்பு பயிலும் மாணவர்களுக்கான உயர் கல்வி வாய்ப்புகள், ஆர்வமுள்ள துறைகளைக் கண்டறிதல், அதற்கான படிப்புகளை தெரிவு செய்தல், அந்த படிப்புகள் உள்ள கல்வி நிறுவனங்கள்,சேர்க்கை விதிமுறைகள், உள்ளிட்டவை கற்றுத்தரப்பட உள்ளது. படிப்பிற்கான வேலை வாய்ப்பு உள்ள துறைகள், அதற்கானபோட்டித் தேர்வுகள், போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் முறைகள் கற்றுத்தரப்படுகிறது. எளிதில் வேலை வாய்ப்பு பெறத் தேவையான மென்திறன் பயிற்சிகள், உரையாடும் திறன், சூழ்நிலையை திறம்பட கையாளுதல், குழு செயல்பாடு, பொது அறிவு,தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளை சிறப்பாகக் கையாளும் திறன் கற்றுத்தரப்பட உள்ளது. இது தவிர, அடிப்படை வாழ்க்கைக்கு தேவையான சுத்தம்,சுகாதாரம் பேணுதல்,சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு,போக்குவரத்து விதிகளை அறிதல் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.
கல்வியாளர்கள், துறை நிபுணர்கள், அரசு அதிகாரிகள்,சாதனையாளர்களின் சொற்பொழிவுகள் இடம்பெறுகின்றன. உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு குறிப்புகள் அடங்கிய வழிகாட்டி கையேடு தயாரித்து மாணவர்களுக்கு வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இது தவிர மாநகராட்சி உயர்கல்வி மையத்தின் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய 120 மாணவ, மாணவியர் இலவச சிவில் சர்வீசஸ் பயிற்சி பெற்று வருகின்றனர். மாநகராட்சி ஆணையர் அன்சுல் மிஸ்ரா உத்தரவின் பேரில் உயர்கல்வி மையத்தின் தலைவர் மற்றும் முதன்மை நிபுணர் பி.கனகராஜ், மாணவர்களுக்கு பயிற்சி வழங்கிவருகிறார்.