தினமணி 08.10.2010
மாநகராட்சி பள்ளிக்கு ரூ. 8 லட்சத்தில் கட்டடம்: செம்மலை எம்.பி. திறந்து வைத்தார்
சேலம், அக். 7: சேலம் மாநகராட்சி தாதகாப்பட்டியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளிக்கு ரூ. 8 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கூடுதல் கட்டடத்தை சேலம் எம்.பி. எஸ்.செம்மலை திறந்து வைத்தார்.
சேலம் மக்களவைத் தொகுதி உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் தாதகாப்பட்டி மேட்டுத் தெருவில் உள்ள நடுநிலைப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்ட ரூ. 8 லட்சம் நிதியை செம்மலை ஒதுக்கியிருந்தார். கட்டி முடிக்கப்பட்ட புதிய வகுப்பறைகளின் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு அதிமுக பகுதிச் செயலர் சண்முகம் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்டச் செயலர் எம்.கே.செல்வராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.இ. வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
புதிய வகுப்பறைகளை செம்மலை எம்.பி. திறந்து வைத்துப் பேசினார். நிகழ்ச்சியில் அவர் கூறும்போது, சேலம் மாநகர், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இதுவரை ரூ. 2 கோடி மதிப்பீட்டில் பள்ளிக் கட்டடங்கள், ஆரம்ப சுகாதார நிலைய கட்டடங்கள், ஆழ்துளை கிணறுகள், சின்டெக்ஸ் குடிநீர் தொட்டிகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் பல லட்சம் மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார். முன்னாள் எம்.எல்.ஏ. நடேசன், முன்னாள் துணை மேயர் செüண்டப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.