தினமணி 03.12.2010
சென்னையில் 67 பள்ளிகளில் புதிய நூலகங்கள் திறப்பு
சென்னை, டிச. 2: சென்னையில் உள்ள 67 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் புதிய நூலகங்களை மாநகர மேயர் மா. சுப்பிரமணியன் புதன்கிழமை திறந்துவைத்தார். சென்னை வண்ணாரப்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் நூலகத்தைத் திறந்துவைத்து அவர் பேசியது:
சென்னை பள்ளி மாணவர்களின் ஆற்றலை மேம்படுத்தும் வகையில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 67 புதிய நூலகங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. இந்தப் பள்ளிகளுக்கு புத்தகங்கள் வாங்குவதற்காக ரூ.5.98 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
இப்போது ஒவ்வொரு பள்ளியிலும் 2,500 புத்தகங்கள் இடம்பெறும் வகையில் புதிய நூலகங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் சுமார் 59 ஆயிரம் மாணவ, மாணவியர் பயனடைவர்.
ஒரு சில தனியார் பள்ளிகளில் மட்டும் நூலக வசதியும், நூலக வகுப்புகளும் உள்ளன. அதேபோல், அரசுப் பள்ளி மாணவர்களிடமும் படிக்கும் ஆர்வத்தை வளர்ப்பதற்காக, பள்ளி நூலகங்களில் படிப்பதற்காக 45 நிமிஷங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை புதன்கிழமை முதல் அமல்செய்யப்படுகிறது. நூலகங்களை மாணவர்கள் நல்ல முறையில் பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றார் அவர். வி.எஸ்.பாபு எம்.எல்.ஏ., துணை மேயர் சத்தியபாமா, நிலைக்குழுத் தலைவர் (கல்வி) ஜானகி, மன்ற எதிர்க்கட்சித் தலைவர் பி. ரவி உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.