Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி பள்ளிகளில் 85 சதவீத தேர்ச்சி

Print PDF

தினகரன்       21.01.2011

மாநகராட்சி பள்ளிகளில் 85 சதவீத தேர்ச்சி

சென்னை, ஜன. 21:

மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களின் தேர்ச்சி 85 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

சென்னை மாநகராட்சி சார்பில் சென்னை பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள், மாணவ மாணவிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கும் விழா கீழ்ப்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி உள் விளையாட்டு அரங்கில் நேற்று மாலை நடந்தது.

மேயர் மா.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் விழாவில் கலந்து கொண்டு ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் உள்ளிட்ட 2514 பேருக்கு ரூ.28 லட்சத்து 55 ஆயிரத்து 750 ஊக்கத் தொகை வழங்கினார். சுமார் ஒன்றரை மணி நேரம் மேடையில் நின்றபடி ஒவ்வொருவருக்கும் துணை முதல்வர் ஊக்கத்தொகை வழங்கினார்.

விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியது:

மாநகராட்சி பள்ளிகளில் கல்வித் தரம் 1996க்கு முன் எப்படி இருந்தது என்பதை அனைவரும் நன்கு அறிவார்கள். பையன் கெட்டுப் போக வேண்டுமானால் மாநகராட்சி பள்ளியில் சேர் என்று கூறும் அளவுக்கு அப்போதைய கல்வித் தரம் இருந்தது. 1996க்குப் பின் தனியார் பள்ளிகளை வெல்லும் அளவுக்கு மாநகராட்சி பள்ளிகளின் கல்வித் தகுதி உயர்ந்தது.

முன்பெல்லாம் தனியார் பள்ளிகளில் சேர்ப்பதற்கு வி.ஐ.பி.க்களின் சிபாரிசுக் கடிதங்களை பெறும் நிலை இருந்தது. இப்போது மாநகராட்சி பள்ளிகளில் சேர்ப்பதற்கு சிபாரிசு படிதங்கள் பெறும் நிலை உள்ளது.

கால் நூற்றாண்டுக்குப் பின் மாநகராட்சி தேர்தல் நடத்தி மாநகராட்சி பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கு சீருடை, தரமான கல்வி, இலவச பாட புத்தகங்கள் வழங்கப்பட்டன. ஆசிரியர்களுக்கு ஊக்கத் தொகை பரிசாக வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.
இதன் காரணமாக 1996ல் மாநகராட்சி பள்ளிகளில் 10, 12ம் வகுப்புகளில் மாணவ மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 56 சதவீதமாக இருந்தது. அரசின் முயற்சியால் அது 69 சதவீதமாக உயர்ந்தது. 2001 & 2002ல் 10ம் வகுப்பில் 50 சதவீதமும் 12ம் வகுப்பில் 73 சதவீதமாகவும் தேர்ச்சி விகிதம் உயர்ந்தது. 2009 & 2010ல் இரு வகுப்புகளிலும் தேர்ச்சி விகிதம் 85 சதவீதமாக உயர்ந்துள்ளது. இப்போது நான் சென்னை மேயராக இல்லையே என்ற ஏக்கம் எனக்கு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆட்சியில் மாநகராட்சி கல்வித் துறைக்கு குறைந்த தொகையே ஒதுக்கப்பட்டது.

ஆனால் கடந்த நான்கரை ஆண்டுகளில் ரூ.20 கோடி செலவிடப்பட்டுள்ளது. 12ம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெறும் மாணவ மாணவிகளுக்கு லேப்டாப், மேல் படிப்பு தொடர ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு பொறியியல் படிக்கும் 25 மாணவர்களுக்கு தலா ரூ.25000 வீதம் ரூ.6.2 லட்சமும், ஆசிரியர், செவிலியர் படிப்பு படிக்கும் 11 பேருக்கு தலா ரூ.5000 .ஏ., பி.எஸ்.சி., படிக்கும் 50 பேருக்கு தலா ரூ.3000, முதல் முறையாக பட்டயப் படிப்பு படிக்கும் 20 பேருக்கு தலா ரூ.3000, வழக்கறிஞர் படிப்பு படிக்கும் ஒருவருக்கு ரூ.5000, 10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற 1257 பேருக்கு ரூ.12 லட்சத்து 15 ஆயிரத்து 500, 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற 222 பேருக்கு ரூ.2 லட்சத்து 2250, தேசிய குழந்தை ஒழிப்பு திட்டத்தின் கீழ் 6 பேருக்கு தலா ரூ.1000, 10ம் வகுப்பில் அதிக தேர்ச்சி கண்ட 586 ஆசிரியர்களுக்கு 3 லட்சத்து 30 ஆயிரம், 12ம் வகுப்பு ஆசிரியர்கள் 330 ஆசிரியர்களுக்கு ரூ.1 லட்சத்து 80 ஆயிரம், தலைமை ஆசிரியர்கள் 5 பேருக்கு ரூ. 23 ஆயிரம் மற்றும் கேடயங்கள் வழங்கப்படுகின்றன.

1592 மாணவ மாணவிகளுக்கு ரூ.23 லட்சத்து 22 ஆயிரத்து 750, 922 ஆசிரியர்களுக்கு ரூ.5 லட்சத்து 33 ஆயிரம் என்று மொத்தம் 2514 பேருக்கு ரூ.28 லட்சத்து 55 ஆயிரத்து 750 இன்று வழங்கப்படுகிறது. வழக்கமாக 10 பேருக்கு பரிசுகளை அடையாளமாக வழங்குவார்கள்.
மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு அவர்கள் எத்தனை பேர் என்றாலும் நானே பரிசுகளை வழங்குவேன். அது போல இன்று மாணவர்கள் அனைவருக்கும் பரிசுகளை வழங்க இருக்கிறேன்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

விழாவிற்கு வந்தவர்களை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் வரவேற்றார். அமைச்சர் ஆற்காடு வீராசாமி வாழ்த்திப் பேசினார்.