தினகரன் 18.03.2013
கல்லூரிக்கு அனுமதி கிடைப்பதில் சிக்கல் மாநகராட்சி மெட்ரிக் பள்ளி விரைவில் தொடங்க திட்டம்
மதுரை: மாநகராட்சி சார்பில் கல்லூரி தொடங்க அரசு அனுமதி கிடைப்பதில் சிக்கலாகி விட்டதால், மெட்ரிக் பள்ளி தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சி சார்பில் 11 மேல்நிலைப்பள்ளி, 13 உயர்நிலை, 14 நடுநிலை, 29ஆரம்ப பள்ளிகள் என மொத்தம் 63பள்ளிகள் உள்ளன. ஏழை, நடுத்தர குடும்பங்களை சார்ந்த ஆயிரக்கணக்கான மாண வர்கள் படிக்கின்றனர். இங்கு பிளஸ்2 படித்து முடிக்கும் மாணவிகள் ஏராளமானோர் மேல் படிப்புக்கு வசதியின்றி படிப்பை நிறுத்தும் நிலை உள்ளது.
எனவே மாநகராட்சி சார்பில் கல்லூரி தொ டங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதற்காக மாநகராட்சி மன்றத்தில் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பப்பட்டது. இடமும் தேர்வு செய்யப்பட்டது. இதற்கு அனுமதி அளிக்கலாமா என்பது குறித்து நடந்த ஆய்வு கூட்டத்தில், தற்போது சுயநிதி கல்லூரிக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. மாநகராட்சி சார்பில் சுயநிதி கல்லூரி நடத்த இயலாது, ஏனென்றால் இம்மாதிரி கல்லூரியில் தனியார் போல் மாநகராட்சி கட்டணம் வசூலிக்க முடியாது, என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கல்லூரி தொடங்கும் திட்டம் கைவிடப்பட்டது.
இதையடுத்து ஆங்கில வழி கல்விக்கு மாநகரட்சி பள்ளிகளில் வசதி ஏற்படுத்த வேண்டும், என கவுன்சிலர்கள் வலியுறுத்தினர். கல்லூரி தொடங்க முடி யாத நிலை இருப்பதால், அரசின் வழி காட்டுதல் பெற்று மாநகராட்சி மெட்ரிக் பள்ளி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேயர் ராஜன்செல்லப்பா தெரிவித்துள்ளார்.
கைவிடப்பட்ட பள்ளிகள்
மாநகராட்சியுடன் வண்டியூர், மேலமடை, உத்தங்குடி உள்ளிட்ட 11 ஊராட்சிகள் 2011-ல் இணைக்கப்பட்டன. இதிலுள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்ப, நடுநிலைப்பள்ளிகள் மாநகராட்சி நிர்வாகத்தில் இணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் கடந்த 2ஆண்டுகளாக இந்த பள்ளிகளின் அடிப்படை வசதிகளை ஊராட்சி ஒன்றியங்கள் கவனிக்காமல் கைவிட்டு விட்டன. மாநகராட்சியும் தங்கள் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் ஒப்படைக்கப்படவில்லை என கண்டுகொள்வது இல்லை. இதனால் இந்த பள்ளிகளில் எந்த ஒரு வசதியும் இன்றி மாணவர்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர்.