தினமணி 14.12.2009
பட்டுக்கோட்டை நகராட்சிப் பள்ளியில் கணினி மையம்
பட்டுக்கோட்டை, டிச. 13: பட்டுக்கோட்டை முஸ்லிம் தெரு நகராட்சி நடுநிலைப் பள்ளியில் கணினி மையம் தொடக்க விழா, கண்ணொளி காப்போம் திட்டத்தில் மாணவர்களுக்கு கண் கண்ணாடி வழங்கும் விழா, அனைவருக்கும் கல்வி இயக்க இணைப்பு மைய மாணவர்களுக்கு சீருடை, புத்தகப் பை, காலணி வழங்கும் விழா, அங்கன்வாடி கட்டட அடிக்கல் நாட்டு விழா ஆகிய விழாக்கள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
விழாவுக்கு, என்.ஆர். ரங்கராஜன் எம்எல்ஏ தலைமை வகித்து, கணினி மையத்தைத் தொடக்கி வைத்தார். அங்கன்வாடி கட்டடத்துக்கு நகர் மன்றத் தலைவர் இ. பிரியா அடிக்கல் நாட்டினார். முன்னாள் தலைவர் சீனி. இளங்கோ கண்ணொளி காப்போம் திட்டத்தில் அளிக்கப்பட்ட கண் கண்ணாடிகளை மாணவர்களுக்கு வழங்கினார்.
இணைப்பு மைய மாணவர்களுக்கு நகர் மன்ற துணைத் தலைவர் செ. கண்ணன் சீருடைகளையும், கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பேபி புத்தகப் பை, காலணிகள் ஆகியவற்றையும் வழங்கினர்.
விழாவில், வட்டார வள மைய மேற்பார்வையாளர் எஸ். மாதவன், நகராட்சி முன்னாள் உறுப்பினர் ஏ. அப்துல் ரஹ்மான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பள்ளித் தலைமையாசிரியர் எஸ். ஜெயவேல் வரவேற்றார். தமிழாசிரியர் வைரமணி நன்றி கூறினார்.