தினமணி 14.12.2009
குடியாத்தம் நகராட்சி மேல்நிலைப் பள்ளி அம்பாலால் அறக்கட்டளை 5 ஆண்டுகளுக்கு தத்தெடுத்தது
குடியாத்தம், டிச. 13: தமிழக அரசின் நலிவடைந்த பள்ளிகளை மேம்படுத்தும் திட்டத்தின்கீழ் குடியாத்தம் நகராட்சி மேல்நிலைப் பள்ளியை அம்பாலால் அறக்கட்டளை 5 ஆண்டுகளுக்கு தத்தெடுத்துக்கொண்டு அதன் வளர்ச்சிக்காக ரூ. 5 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது.
கடந்த 1906-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பள்ளி, 1950-ம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாகவும், 1978-ம் ஆண்டு மேல்நிலைப் பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டது. இப்பள்ளியில் சுமார் 2 ஆயிரம் மாணவர்கள் படிக்கின்றனர். 70 ஆசிரியர்கள் பணி புரிகின்றனர். தற்போது பள்ளி நலிவடைந்த நிலையில் உள்ளது.
நலிவடைந்த பள்ளிகளின் வளர்ச்சிப் பணிகளில் தனியார் பங்கை அதிகரிக்க தமிழக அரசு முயற்சிகள் மேற்கொண்டுள்ளது. அதன்படி அம்பாலால் அறக்கட்டளை இப்பள்ளியை 5 ஆண்டுகளுக்கு தத்தெடுக்க முடிவெடுத்தது.
சனிக்கிழமை குடியாத்தத்தில் நடைபெற்ற விழாவில் அம்பாலால் அறக்கட்டளை நிர்வாகிகள் ஏ. பாரஸ்மல் ஜெயின், ஏ. கேவல்சந்த் ஜெயின், கே, ஜவரிலால் ஜெயின் ஆகியோர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜி. மூர்த்தி முன்னிலையில் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
கே.எம்.ஜி. கல்லூரிச் செயலர் கே.எம்.ஜி. ராஜேந்திரன், தொழிலதிபர் அமீன் சாஹிப், நகர்மன்ற துணைத் தலைவர் எஸ். சௌந்தரராஜன், ஆசிரியர் டி. வேலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.