தினமணி 19.12.2009
ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளிக்கு தானியங்கி நாப்கின் வழங்கும் இயந்திரங்கள்
திருப்பூர், டிச.18: குறைந்த விலையில் நாப்கின்கள் பெறவும், பயன்படுத்தப்பட்ட நாப்கின்களை சுற்றுச் சூழலுக்கு கேடில்லாமல் அப்புறப்படுத்தவும் ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளிக்கு ரூ.60 ஆயிரம் மதிப்பிலான 2 நாப்கின் வழங்கும் இயந்திரங்களை முயற்சி மக்கள் அமைப்பு மற்றும் மணியம் ஹார்டுவேர் சார்பில் வழங்கப்பட்டது.
÷60 சதவீத பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்க்கு மாதவிடாய் காலத்தில் சுகாதாரமற்ற துணிகளை பயன்படுத்துவதே காரணம் என மருத்துவ ஆய்வு தெரிவிக்கிறது.
சுகாதாரமான நாப்கின்களை பயன்படுத்துவதன் மூலம் இந்நோய்க்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்று விழிப்புணர்வு பிரசாரங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
÷இந்நிலையில், கடைகளில் 8 நாப்கின்கள் கொண்ட பாக்கெட்டின் விலை ரூ.20- க்கு விற்கப்படுவதால் ஏழைப் பெண்களால் அவற்றை வாங்க முடிவதில்லை. இப்பிரச்னை யை தவிர்க்க, முயற்சி மக்கள் அமைப்பு சார்பில் திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.30 ஆயிரம் மதிப்பிலான தானியங்கி நாப்கின் வென்டிங் இயந்திரம் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.
÷இந்த இயந்திரத்தில் இரண்டு ஒரு ரூபாய் நாணயங்களை போட்டால் ஒரு நாப்கின் பெற்றுக் கொள்ள முடியும். மேலும், பயன்படுத்தப்பட்ட நாப்கின்களை சுற்றுச்சூழலுக்கு கேடில்லாத வகையில் அப்புறப்படுத்த நாப்கின் பர்னிங் இயந்திரமும் இலவசமாக அளிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் மற்றொரு நாப்கின் வென்டிங் மற்றும் பர்னிங் இயந்திரம் மணியம் ஹார்டுவேர் சார்பில் வழங்கப்பட்டுள்ளது.
÷இந்த இயந்திரங்கள் பள்ளிக்கு அர்ப்பணிக்கும் விழா வெள்ளிக்கிழமை நடந்தது.
பள்ளித் தலைமை ஆசிரியர் விஜயாஆனந்தம் தலைமை தாங்கினார். இயந்திரங்களை மாவட்ட சுகாதாரத்துறை இணை விஜயலட்சுமி வழங்க பள்ளி தலைமையாசிரியர் பெற்றுக் கொண்டார்.
தொழிலதிபர் சுமன்சந்திரகுமார்ஆசர், மருத்துவர் பிரியாவிஸ்வம், முயற்சி மக்கள் அமைப்பு தலைவர் சிதம்பரம், மணியம் ஹார்டுவேர் நிறுவனர் ராமசாமி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ரத்தினசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.