தினகரன் 24.12.2009
மாணவர்களுக்கு விரைவில் இலவச மூக்கு கண்ணாடி
சென்னை : மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு அடையாள அட்டை, மாணவிகளுக்கு தர அடையாள முத்திரை, பிஸ்கெட்டுகள் வழங்கும் விழா சைதாப்பேட்டையில் உள்ள மாநகராட்சி பெண்கள் பள்ளியில் நேற்று நடந்தது. இவற்றை வழங்கி மேயர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:மாநகராட்சி பள்ளிகளில் 12ம் வகுப்பில் முதல் 25 இடங்களை பிடிக்கும் மாணவர்களின் கல்விச் செலவை அரசே ஏற்கிறது. 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் இடம் பெறும் மாணவர்களுக்கு 500 வீதம் அரசு வழங்குகிறது. தனியார் பள்ளிகளின் ஆதிக்கத்தை முறியடிக்கும் வகையில் மாநகராட்சி பள்ளிகள் செயல்படுகின்றன. 100 சதவீத தேர்ச்சி கொண்டுவருவதே எங்கள் நோக்கம். பார்வை குறைபாடு உள்ள மாணவர்களுக்கு இலவச மூக்கு கண்ணாடி வழங்கும் திட்டத்தை முதல்வர் கருணாநிதி விரைவில் தொடங்கி வைக்க இருக்கிறார். இவ்வாறு மேயர் பேசினார். நிகழ்ச்சியில், துணை மேயர் சத்தியபாபா, துணை ஆணையர் (கல்வி) எம்.பாலாஜி, மன்ற எதிர் கட்சி தலைவர் சைதை ப.ரவி, நிலைக்குழு தலைவர் (கல்வி) கே.ஜானகி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.