தினமணி 24.12.2009
குடியாத்தம் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ரூ.5 லட்சத்தில் வசதிகள்
குடியாத்தம், டிச. 23: குடியாத்தம் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ரூ.5 லட்சம் செலவில் மேம்பாட்டு வசதிகளை செய்துதருவதற்கு அம்பாலால் அறக்கட்டளை முடிவு செய்துள்ளது.
பள்ளியை இந்த அறக்கட்டளை 5 ஆண்டுகளுக்கு தத்தெடுத்துக் கொண்டுள்ளது. இதற்காக அறக்கட்டளை நிர்வாகிகள் ஏ. பாரஸ்மல் ஜெயின், ஏ. கேவல்சந்த் ஜெயின் ஆகியோருக்கு பள்ளியில் செவ்வாய்க்கிழமை பாராட்டு விóழா நடைபெற்றது.
திருப்பத்தூர் கல்வி மாவட்ட அலுவலர் சௌதாமணி, புரவலர்களை பாராட்டி சால்வை அணிவித்தார். நகராட்சி ஆணையர் ஆர். சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் வி. கணேசன் வரவேற்றார். பள்ளியில் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்துதல், இதில் பங்கேற்கும் மாணவர்களுக்கு தினமும் சிற்றுண்டி வழங்குதல், மாணவர்களுக்கு இலவச நவீன கல்வி உபகரணங்கள் வழங்குதல், மாணவர்களின் திறமைகளை ஊக்குவிக்க பல்வேறு பயிற்சிகளை நடத்துதல் உள்ளிட்ட மேம்பாட்டு பணிகளை செய்து தருவதாக பள்ளிப் புரவலர்கள் தெரிவித்தனர்.