தினமணி 04.01.2010
புதிய நகராட்சிக் கட்டடத்தில் இன்று முதல் மகளிர் மேல்நிலைப்பள்ளி
பொள்ளாச்சி, ஜன. 3: பொள்ளாச்சி நகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி திங்கள்கிழமை முதல் ரூ.8.42 கோடி செலவில் கட்டப்பட்ட கட்டடத்தில் இயங்க உள்ளது.
சுமார் 100 ஆண்டு காலப் பழமை மிக்க கட்டடத்தில் பொள்ளாச்சி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வந்தது. போதுமான இட வசதி இல்லாததால் கோட்டூர் சாலையில் 11 ஏக்கர் பரப்பளவில் உள்ள புதிய இடத்தில் கட்டடம் கட்டத் தீர்மானிக்கப்பட்டது. ரூ.8.42 கோடி செலவில் இக்கட்டடம் கட்டப்பட்டது. 2 மாடியில் ஆய்வகம், வகுப்பறைகள், விளையாட்டு மைதானம் ஆகியவற்றுடன் கூடிய புதிய பள்ளிக் கட்டடத்தைத் தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த அக்டோபர் மாதத்தில் திறந்து வைத்தார்.
தமிழகத்திலேயே முதன் முதலாக பொள்ளாச்சி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று வாங்கப்பட்டுள்ளது. தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்ட நிலையில் இப்புதிய கட்டடத்தில் திங்கள்கிழமை முதல் பள்ளி செயல்பட உள்ளது. நகராட்சி நிர்வாகச் செயலர், நிர்வாக ஆணையாளர், தலைமைப் பொறியாளர், நகர்மன்றத் தலைவர் உள்ளிட்டோர் திங்கள்கிழமை நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.