தினமலர் 21.01.2010
மாநகராட்சி பள்ளிகளில் மாறுகிறது சீருடை நிறம்
கோவை : கோவை மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியரின் சீருடை நிறத்தை மாற்ற, கல்விக்குழு தீர்மானித்துள்ளது.
மாநகராட்சி கல்விக்குழு கூட்டம், மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. குழு தலைவர் கல்யாணசுந்தரம் தலைமை வகித்தார், கமிஷனர் அன்சுல் மிஸ்ரா முன்னிலை வகித்தார். மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் 10 மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவியரை பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற வைக்க, ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிப்பது; மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற தயார் படுத்திட உபகரணங்கள் வழங்குவது; பள்ளி மைதானங்களை தயார் படுத்துவது உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன. மேலும், மாநகராட்சி பள்ளி மாணவர்கள் தற்போது அணியும் சீருடை நிறத்தில் மாற்றம் கொண்டு வரவும் தீர்மானிக்கப்பட்டது.
மேலும், 45 பள்ளிகளில் செயல்வழி கற்றல் முறையில் படிக்கும் மாணவர்களுக்கு வட்ட வடிவ டேபிள், இருக்கைகளை அமைக்க 24.5 லட்சம் செலவில் பைபரில் (கல்நார்) தயாரிக்கப்பட்ட மேஜை, இருக்கைகளை வாங்குவது என முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில், கவுன்சிலர்கள் ஷோபனா, சிவகாமி, மீனா, தமிழ்ச்செல்வி, செல்வராஜ், செந்தில், மாநகராட்சி கல்வி அலுவலர் (பொறுப்பு) ராஜூ, பொறியாளர்கள் சுகுமாரன், கணேஷ்வரன், உயிரியல் பூங்கா இயக்குனர் பெருமாள்சாமி ஆகியோர் பங்கேற்றனர்.