தினமலர் 26.01.2010
மாநகராட்சி பள்ளி மாணவருக்கு சத்துணவு சாப்பிட இலவச தட்டு
கோவை : சத்துணவு சாப்பிடும் மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு, எவர்சில்வர் தட்டு, டம்ளர், ஸ்பூன் ஆகியவற்றை, மாநகராட்சி சார்பில் இலவசமாக கல்விக்குழு வழங்கியது.கோவை மாநகராட்சியின் 85 பள்ளிகளில் 80 சத்துணவு மையங்கள் செயல்படுகின்றன. 10,000 மாணவ மாணவியர் சத்துணவு திட்டத்தில் பயன் பெறுகின்றனர்.மாநகராட்சி பள்ளிகளின் சத்துணவு மையங்களுக்கு தேவையான பாத்திரங்கள், மாணவ மாணவியர் சாப்பிட எவர்சில்வர் தட்டு, ஸ்பூன், டம்ளர் போன்றவைகளை மாநகராட்சி 12.49 லட்ச ரூபாயில் வாங்கியது. பொருட்கள் வழங்கும் விழா மருதமலை ரோட்டிலுள்ள பி.என்.புதூர் மாநகராட்சி ஆரம்ப பள்ளியில் நடந்தது. மாநகராட்சி கமிஷனர் அன்சுல்மிஸ்ரா, மேயர் வெங்கடாசலம், துணை மேயர் கார்த்திக் ஆகியோர் பங்கேற்றனர்.பள்ளி மாணவர்கள் சத்துணவு சாப்பிட பயன்படுத்துவதற்கான தட்டு, டம்ளர், ஸ்பூன் ஆகியவற்றை மாநகராட்சி கமிஷனர் வழங்கினார். மாணவர்கள் உணவு அறையை மேயர் வெங்கடாசலம் திறந்து வைத்தார். இவ்விழாவில் மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர் செல்வராஜ், கல்விக்குழு தலைவர் கல்யாணசுந்தரம் உள்ளிட்ட கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.