தினமணி 04.02.2010
பழுதடைந்த பள்ளிக் கட்டடங்கள் விரைவில் சீரமைப்பு: ஆட்சியர்
காஞ்சிபுரம், பிப். 3: காஞ்சிபுரம் மாவட்டத்தில் பழுதடைந்த நிலையில் உள்ள பள்ளிக் கட்டடங்கள் விரைவில் சீரமைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சந்தோஷ் கே. மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
÷இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
உள்ளாட்சித் துறை அமைச்சர் அறிவித்துள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளிகள் சீரமைப்புத் திட்டத்தின் கீழ், ஆண்டுதோறும் இம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி மற்றும் மூன்றாம் நிலை நகராட்சிகளில் 117 ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகள் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்படும்.
÷இதன் படி, வரும் நிதியாண்டில் (2010-11) பேரூராட்சி மற்றும் மூன்றாம் நிலை நகராட்சிகள் உள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகள், பழுதடைந்த கட்டடங்கள் சீரமைக்கப்படும்.
÷பள்ளிக் கட்டடங்களுக்கு வெள்ளை மற்றும் வண்ணம் அடித்தல், கூரை தளம் பழுது பார்த்தல், புதிதாக மாற்றி அமைத்தல், சேதமடைந்த ஓடுகள், ரீப்பர்கள் மற்றும் சட்டங்களை பழுது பார்த்தல், சுவர்களில் உள்ள விரிசல்களை சரிபார்த்தல், ஓட்டு கூரைகளை முழுமையாக மாற்றி அமைத்தல், ஆஸ்பெஸ்டாஸ் கூரையை முழுமையாக அகற்றி ஓட்டு கூரை அமைத்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ளலாம்.
÷இப் பணிகளை ஊராட்சித் தலைவர், தலைமை ஆசிரியர், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர், ஊராட்சி ஒன்றிய பொறியாளர் அல்லது உதவிப் பொறியாளர் (ஊ.வ), வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி), ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் ஆகியோர் கொண்ட குழு தேர்வு செய்யலாம்.
÷மாவட்ட ஆட்சியர், திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உள்ளிட்ட மாவட்ட நிலை அலுவலர்கள் பள்ளிகளைப் பார்வையிட்டு, சரித்தன்மையை ஆய்வு செய்வர். இதேபோல, அண்ணா மறுமலர்ச்சி திட்டம செயல்படுத்தப்படும் ஊராட்சிகளில் உள்ள பள்ளிகளும் சீரமைப்புக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றார் ஆட்சியர்