தினமலர் 08.02.2010
மாநகராட்சி ஆசிரியர் சங்கம் சார்பில் முப்பெரும் விழா
கோவை : மாநகராட்சி அனைத்து ஆசிரியர் சங்கம் சார்பில் முப்பெரும் விழா காந்திபுரம், மாநகராட்சி திருமண மண்டபத்தில் நடந்தது.
சங்க பொது செயலாளர் சரவணமுத்து வரவேற்றார். தலைவர் மோகனசுந்தரம் தலைமை வகித்தார். முன்னாள் கல்வி அலுவலர் ராபர்ட் கருணாகரன், தலைமையாசிரியர் ராமசாமி முன்னிலை வகித்தனர். பொருளாளர் சிவசாமி ஆண்டறிக்கை வாசித்தார்.
மேயர் வெங்கடாசலம் பேசியதாவது: கடந்த 10 ஆண்டுகளில் மாநகராட்சி பள்ளிகள் வளர்ச்சி அடைந்துள்ளன. கல்விக் குழுவில் பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டு, பள்ளிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் மாநகராட்சி பள்ளிகளில் பயின்ற மாணவர்களில் 43 பேர் சிறந்தவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில், கோவை மாவட்டத்தில் மட்டும் 17 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருப்பவர்கள் ஆசிரியர். கல்விக்காக செயல்படுத்தப்படும் நல்ல திட்டங்களை ஆசிரியர்கள் பயன்படுத்தி மாணவர்களின் கல்வி திறனை வளர்க்க வேண்டும். இவ்வாறு, மேயர் பேசினார்.
எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ்2 பொது தேர்வில் முதல்மதிப்பெண் பெற்ற மாணவிகள் பவித்ரா, ரூபணி ஆகியோருக்கு பரிசு வழங்கப்பட் டது. மேலும், தேர்ச்சி சதவீதம் அதிகம் பெற்ற ரத்தினபுரி, மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மற்றும் ராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி பள்ளிகளுக்கு பரிசு வழங்கப்பட்டன. விழாவில், துணைமேயர் கார்த்திக், கல்விக்குழு தலைவர் கல்யாணசுந்தரம், உறுப்பினர்கள் ஷோபனா, மீனாலோகநாதன் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் உதயகுமார் பங்கேற்றனர். ஆசிரியர் சாமுவேல் நன்றி கூறினார்.