தினமணி 04.03.2010
தென்னம்பாளையம் பள்ளியில் எம்எல்ஏ நிதியில் கூடுதல் வகுப்பறைகள்
திருப்பூர், மார்ச் 3: திருப்பூர் மாநகராட்சி, தென்னம்பாளையம் நடுநிலைப் பள்ளியில் சட்டப்பேரவை உறுப்பினர் சி.கோவிந்தசாமியின் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.13.50 லட்சம் மதிப்பில் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணிக்கு புதன்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.
தென்னம்பாளையம் பள்ளி மைதானத்தில் நடந்த இந்த விழாவுக்கு கல்வி குழுத் தலைவர் ஜி.ரத்தினசாமி தலைமை வகித்தார். இதில் சட்டப்பேரவை உறுப்பினர் சி.கோவிந்தசாமி கலந்துகொண்டு கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.
பள்ளித் தலைமை ஆசிரியை தனலட்சுமி வரவேற்றார். பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் எப்.கே.சி.பழனிச்சாமி பூமி பூஜை செய்து வைத்தார். பெற்றோர் ஆசிரியர் சங்கப் பொருளாளர் பொன்னுசாமி மற்றும் ஆர்.எஸ்.ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.
சட்டப்பேரவை உறுப்பினரின் 2009-10ம் நிதியாண்டுக்குரிய ரூ.13.50 லட்சம் மதிப்பில் பள்ளியின் முதல் தளத்தில் மூன்று வகுப்பறைகள் கட்டப்படுகின்றன. இப்பணி திட்டக் காலத்தில் கட்டி முடிக்கப்படும் என்று, ஜி.ரத்தினசாமி தெரிவித்தார்