தினமணி 06.03.2010
மாநகராட்சி தொடக்கப் பள்ளிகளில் ஏப்ரல் 1 முதல் மாணவர் சேர்க்கை: மேயர் தகவல்
சென்னை, மார்ச் 5: சென்னை மாநகராட்சி தொடக்கப் பள்ளிகளில் ஏப்ரல் 1}ம் தேதி முதல் மாணவ, மாணவிகள் சேர்க்கை நடைபெறும் என்று மேயர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
மாநகராட்சிப் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக புத்தகப் பைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவில் பங்கேற்று மாணவர்களுக்கு புத்தகப் பைகளை வழங்கி மேயர் மா. சுப்பிரமணியன் பேசியது:
மாநகராட்சிப் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் 1.05 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு ரூ. 1 கோடியே 4 லட்சத்து 34 ஆயிரத்து 199 செலவில் இலவச புத்தகப் பைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தப் பைகள் அண்ணா பல்கலைக்கழகம் மூலமாக தர நிர்ணயம் செய்யப்பட்டு, கே.பி.என். நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டது.
இதுபோல் இலவசமாக வண்ணச் சீருடைகள், காலணிகள், அகராதி நூல்கள், மாலை நேர சிறப்பு வகுப்புகளில் மாணவர்கள் சோர்வின்றி படிப்பதற்காக பிஸ்கட்டுகள், கவனச் சிதறலை தவிர்ப்பதற்காக யோகா பயிற்சிகள் உள்பட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள், இந்தத் திட்டங்கள் அனைத்தையும் அந்தந்தப் பகுதி மக்களிடம் எடுத்துரைத்து மாணவர் சேர்க்கைக்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இதற்காக வடசென்னையிலும், தென்சென்னையிலும் விழிப்புணர்வு பயிலரங்கமும் விரைவில் நடத்தப்பட உள்ளது.
மாநகராட்சி தொடக்கப் பள்ளிகளில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் மாணவர் சேர்க்கைக்கான நடவடிக்கைகள் தொடங்கும் என்றார்