தினமலர் 10.03.2010
மாநகராட்சி பள்ளி மாணவர்கள் மாநில ரேங்க் பெற பயிற்சி
மதுரை: மாநகராட்சி பள்ளிகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள், மாநில ரேங்க் பெற தனிப்பயிற்சி இன்று முதல் துவங்குகிறது.மாநகராட்சி பள்ளிகளில் அரையாண்டு தேர்வில் மூன்று பாடங்களுக்கு மேல் பெயில் மதிப்பெண் பெற்ற, 100 ஏழை மாணவர்களுக்கு மாநகராட்சி சார்பில் ஏற்கனவே தனிப்பயிற்சி நடக்கிறது. உணவு, தங்கும் இடம் இலவசமாக அளிக்கப்பட்டு, தினமும் தனி வகுப்புகள் நடக்கின்றன.இன்று முதல் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கான தனிப்பயிற்சி துவங்குகிறது. மாநகராட்சி பள்ளிகளில் அரையாண்டு தேர்வில் 450 மதிப்பெண் பெற்ற 100 மாணவர்கள் இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மாநகராட்சி பில்லர் ஹாலில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தனி வகுப்புகள் நடக்கும். ஒரு நாளைக்கு ஒரு பாடம் வீதம் 5 நாட்களுக்கு இப்பயிற்சி நடக்க உள்ளது. சிறப்பு ஆசிரியர்கள், கம்ப்யூட்டர் சிலைட் மூலம், பயிற்சி அளிப்பர். இம்மாணவர்களை மாநில ரேங்க் பெற, தயார்படுத்தும் வகையில் இப்பயிற்சி தரப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மக்கள் தொடர்பு அலுவலர் ஆர்.பாஸ்கரன், மாநகராட்சி கல்வி அலுவலர் அம்மையப்பன் செய்கின்றனர்.