தினமணி 23.03.2010
கோவை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி
கோவை, மார்ச் 22: கோவை மாநகராட்சி பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு காலையில் சிற்றுண்டி வழங்கும் திட்டம் மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளில் பெரும்பகுதியினர் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
இவர்களின் பெற்றோர்கள் தினக்கூலியாக இருப்பதால் பணிக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதைத் தொடர்ந்து குழந்தைகள் காலை உணவு உண்ணாமல் பள்ளிக்கு வருகின்றனர்.
இதனால் பள்ளிக் குழந்தைகள் ஆரோக்கியம் குறைந்து படிப்பில் கவனம் செலுத்த முடியாத நிலை உருவாகிறது.
அவிநாசிலிங்கம் மகளிர் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் மேற்கண்ட தகவல்கள் வெளியாயின.
எனவே, மாநகராட்சி பள்ளிகளில் 1 முதல் பிளஸ் 2 வரையிலான குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் ரூ.2 கோடியில் செயல்படுத்தப்படுகிறது. மாநில அரசின் அனுமதி பெற்று இத்திட்டம் செயல்படுத்தப்படும் என மாநகராட்சி பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.