தினமணி 06.04.2010
நகராட்சிப் பள்ளிக்கு சிறந்த கிராமக் கல்விக்குழு விருது
பவானி, ஏப், 5: குமாரபாளையம் ஜேகேகே.சுந்தரம் நகராட்சிப் பள்ளியின் சிறந்த செயல்பாடுகளுக்காக சிறந்த கிராமக் கல்விக்குழு விருது வழங்கப்பட்டுள்ளது.
பள்ளிபாளையம் ஒன்றியத்தில் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் 64-ம், உயர்நிலை மற்றும் நடுநிலைப் பள்ளிகள் 15-ம் உள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும் செயல்பட்டு வரும் கல்விக் குழுவில் உள்ளாட்சி பிரதிநிதிகள், பெற்றோர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக செயல்படுவர்.
இக்குழுவினர் கூடி பள்ளியின் வளர்ச்சி குறித்து விவாதித்து பள்ளி வளர்ச்சிக்குத் தேவையான உதவிகளை வழங்குவர். இக்குழுவின் செயல்பாடுகள், பள்ளியின் நிலை, கல்வித் தரம் குறித்து கண்காணித்து சிறப்பாக செயல்படும் குழுக்களுக்கு அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் ஒவ்வொரு ஒன்றியத்தில் ஒரு பள்ளிக்கு விருது வழங்கப்படும்.
இவ்விருதுக்கு, குமாரபாளையம் ஜேகேகே நகர் நகராட்சித் தொடக்கப் பள்ளியின் கல்விக் குழு பள்ளிபாளையம் ஒன்றியத்தில் சிறந்த குழுவாகத் தேர்வு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியர் உ.சகாயம் இக்குழுவுக்கு விருதினை வழங்கிப் பாராட்டுத் தெரிவித்தார்.
பள்ளித் தலைமையாசிரியர் ஏ.ராஜேந்திரன், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் ஜெயலட்சுமி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கே.சுப்பிரமணி. பொருளாளர் ஏ.பெருமாள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.