தினமணி 20.04.2010
மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு ஏப். 21 முதல் இலவச கணினி, ஆங்கில பேச்சுப் பயிற்சி
மதுரை, ஏப். 19: மதுரை மாநகராட்சிப் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவர்களுக்கு இலவசமாகக் கணினி, ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி அளிக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் எஸ்.செபாஸ்டின் கூறியதாவது:
தற்போது 11}ம் வகுப்புத் தேர்வு எழுதி பிளஸ் 2 செல்லக் கூடிய 200 ஏழை மாணவர்கள் இத்திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு வரும் 21}ம் தேதி முதல் மகால் அருகில் உள்ள மாநகராட்சி திருவள்ளுவர் பள்ளியில் காலை மற்றும் மாலையில் சிறப்பு ஆசிரியர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்படும்.
ஒரு வகுப்புக்கு 50 பேர் தேர்வு செய்து, ஒரு மணி நேரம் கணினிப் பயிற்சியும், அடுத்த ஒரு மணி நேரம் ஆங்கிலப் பயிற்சியும் (ஸ்போக்கன் இங்கிலீஷ்) அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கெனவே 10}ம் வகுப்பு மற்றும் 12}ம் வகுப்பு ஏழை மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பாடம் வாரியாக சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டு, நடந்து முடிந்த தேர்வுகளில் பங்கேற்றுள்ளனர்.
சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டதால் கடந்தாண்டைவிட தற்போது தேர்ச்சி விகிதம் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்ச்சி விகிதம் அதிகரிக்கும்பட்சத்தில் இத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கமிஷனர் எஸ்.செபாஸ்டின் தெரிவித்தார்.