தினமணி 22.04.2010
ஏழை மாணவ, மாணவியருக்கான கணினி சிறப்பு பயிற்சி வகுப்பு தொடக்கம்
மதுரை, ஏப். 21: மதுரை மாநகராட்சிப் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவ, மாணவியருக்கான கணினி, ஆங்கிலம் சிறப்பு பயிற்சிகள் புதன்கிழமை தொடங்கப்பட்டன.
மகால் திருவள்ளுவர் நகராட்சிப் பள்ளியில் இந்த சிறப்பு வகுப்பை மாநகராட்சி ஆணையர் எஸ்.செபாஸ்டின் தொடங்கிவைத்தார். அவர் பேசியதாவது:
வெள்ளையன் கல்வி மற்றும் மருத்துவ சாரிடபிள் டிரஸ்ட் மற்றும் கிரேஸ் பீட்டர் சாரிடபிள் டிரஸ்ட் ஆகிய தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் இச்சிறப்பு வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
25 கணிப்பொறிகள், 5 சிறந்த கணிப்பொறி வல்லுநர்கள் மற்றும் 5 சிறந்த ஆங்கில ஆசிரியர்கள் மூலம் நாள் ஒன்றுக்கு 5 வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.
மாணவர்கள் கோடை விடுமுறையை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் இந்தப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதை மாணவ, மாணவியர் உரிய வகையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
இதில், ஈ.வெ.ரா. பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியை பசுல் ரகுமான், கிரேஸ் பீட்டர் சாரிடபிள் டிரஸ்ட் நிறுவனர் விஜயகுமார், கல்வி அலுவலர் அம்மையப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.