தினமணி 07.10.2010
மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் 200 பேருக்கு ஐ.ஐ.டி. பயிற்சி
![](http://www.dinamani.com/Images/article/2010/10/7/6munici.jpg)
சென்னை கிண்டியில் உள்ள ஐ
.ஐ.டி.யில் (இந்திய தொழில்நுட்ப நிறுவனம்) புதன்கிழமை தொடங்கிய தலைமையாசிரியர்களுக்கான தலைமைப்பண்பு, நிர்வாகத்திறன் குறித்த பயிற்சி
சென்னை, அக்.6: சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் படிக்கும் 200 சிறந்த மாணவர்களுக்கு ஐ.ஐ.டி. பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது என்று மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சி பள்ளியில் உள்ள தலைமை ஆசிரியர்களுக்கு மேலாண்மை திறன், தலைமைப் பண்பு மற்றும் நிர்வாகத் திறன் குறித்த 3 நாள் பயிற்சி முகாம் கிண்டியில் உள்ள ஐ.ஐ.டி.யில் (சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனம்) புதன்கிழமை தொடங்கியது.
இந்தப் பயிற்சி முகாமைத் தொடங்கி வைத்து மேயர் மா.சுப்பிரமணியன் பேசியது:
சென்னை பள்ளிகளின் கல்வித்தரத்தை மேம்படுத்திட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே சென்னையில் மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் மூலம் மேலாண்மை பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
இப்போது துவக்கி வைக்கப்பட்டுள்ள பயிற்சி முகாமில் சென்னை மாநகராட்சி மேல்நிலை, உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் என மொத்தம் 100 பேருக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சிக்காக சென்னை மாநகராட்சி | 7.50 லட்சம் செலவு செய்கிறது.
இப்போது ஐ.ஐ.டி. நிறுவனத்தில் பயிற்சி பெறும் ஆசிரியர்களின் திறமையால், சென்னை மாநகராட்சியின் கீழ் உள்ள பள்ளி மாணவர்களும் ஐ.ஐ.டி.யில் சேரும் வாய்ப்பு வருங்காலத்தில் நிச்சயம் உருவாகும்.
சென்னை பள்ளிகளில் 10 ஆற்றல்சார் பள்ளிகள் தெரிவு செய்யப்பட்டு 9-ம் வகுப்பிலும், 10-ம் வகுப்பிலும் சிறந்து விளங்கும் 200 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, நுங்கம்பாக்கத்தில் உள்ள எஃப்.ஐ.ஜே.இ.இ. என்ற நிறுவனத்தின் மூலம் பயிற்சி வழங்கப்படுகிறது என்றார் மா.சுப்பிரமணியன்.
ஐ.ஐ.டி. சென்னை இயக்குநர் எம்.எஸ்.ஆனந்த், மாநகராட்சி துணை ஆணையர் (சுகாதாரம், வருவாய் மற்றும் நிதி) அனுஜார்ஜ், கல்வி அலுவலர் எம்.மாதேவ பிள்ளை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.