தினகரன் 22.07.2010
கண்ணொளி காப்போம் திட்டம் 5,186 மாணவருக்கு கண் கண்ணாடிகள்
சென்னை, ஜூலை 22: தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை:
பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டத்தை முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். இந்த திட்டத்தின்கீழ் சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள பள்ளிகளில் 6, 7, 8 வகுப்புகளில் படிக்கும் 1 லட்சத்து 412 மாணவ, மாணவிகளுக்கு கண் மருத்துவ நிபுணர்கள் பரிசோதனை செய்தனர். 9,500 குழந்தைகளுக்கு பார்வை குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது.
முதற்கட்டமாக 5,186 மாணவ, மாணவிகளுக்கு ரூ.20 லட்சத்தில் கண்ணாடிகள் வழங்கப்படுகின்றன. முதல்வர் கருணாநிதி தலைமை செயலகத்தில் 20 மாணவ மாணவிகளுக்கு கண் கண்ணாடிகள் வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்.
தசை திறன் குறைபாடு உள்ளவர்களுக்கான சிறப்பு பள்ளி குழந்தைகள் பயணம் செய்ய ரூ.17 லட்சத்தில் சிறப்பு பேருந்தை நவநீதம் குப்புசாமி, ஜெயா கல்வி அறக்கட்டளைகள் சார்பில் நிறுவனர் கு.க.செல்வம் முதல்வர் கருணாநிதியிடம் தந்தனர். பேருந்து சாவியை மேயர் மா.சுப்பிரமணியனிடம் முதல்வர் கருணாநிதி வழங்கினார்.
அப்போது நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் செயலர் அஷோக் வர்தன் ஷெட்டி, சென்னை மாநகராட்சி இணை ஆணையர் ஆஷிஷ் சட்டர்ஜி, துணை ஆணையர்கள் ஜோதி நிர்மலா, எம்.பாலாஜி உடனிருந்தனர். இவ்வாறு அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.