தினமணி 21.05.2010
ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு தொடங்கியது
விழுப்புரம், மே 20: தொடக்கக் கல்வித் துறையின் கீழ் விழுப்புரம் மாவட்டத்தில் செயல்பட்டுவரும் அரசு, நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு வியாழக்கிழமை தொடங்கியது.
மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் (பொறுப்பு) மு. தனசேகரன் தலைமையில் விழுப்புரம் ராமகிருஷ்ணா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கலந்தாய்வு நடைபெற்றது.
நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாறுதல் மற்றும் பதவி உயர்வு மற்றும் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப் பள்ளிகளில் 6,7,8 வகுப்புகளில் பணிபுரிந்து உயர்நிலைப் பள்ளிக்கு ஈர்த்துக் கொள்ளப்படாத பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாறுதலும், பட்டதாரிகள் மற்றும் தமிழ் ஆசிரியர்கள் ஒன்றியத்திற்குள் மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடைபெற்றது.அவர்களுக்கு உடனுக்குடன் மாறுதலுக்கான உத்தரவுகளை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் வழங்கினார்.
தொடர்ந்து வெள்ளிக்கிழமை தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மாறுதல் மற்றும் பதவி உயர்வு, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்ந்த நடுநிலைப் பள்ளியில் 6,7,8 வகுப்புகளில் பணிபுரிந்து உயர்நிலைப் பள்ளிக்கு ஈர்த்துக் கொள்ளப்படாத இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் அந்த ஒன்றியத்தில் உபரி இடைநிலை ஆசிரியர்கள் ஆகியோருக்கான பணி நிரவல் கலந்தாய்வு நடக்கிறது